தடையை தகர்த்து கூட்டத்தை தொடங்கினார் டிடிவி...! - திருச்சியில் குவியும் தொண்டர்கள்...
திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு பொதுக்கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் இன்று தொடங்கியது.
நீட் தேர்வுக்கு எதிராகவும் மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே போராட்டம் நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் திருச்சியில் டிடிவி தினகரன் தலைமையில் செப்.9 ஆம் தேதி பொதுக்கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனிடையே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் நீட் தேர்வுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் இருந்தால் மாநில அரசு அனுமதிக்க கூடாது என கூறி வழக்கை ஒத்திவைத்தது.
இதைதொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் கழகத்தின் சார்பில் நடைபெற இருந்த நீட் எதிர்ப்பு கூட்டத்தை ரத்து செய்வதாக டிடிவி தினகரன் அறிவித்தார்.
இதையடுத்து மக்களுக்கு இடையூறு இல்லை என்றால் கூட்டத்தை நடத்தலாம் என நீதிமன்றம் விளக்கம் அளித்தது.
இதனால் வரும் 16 ஆம் தேதி திருச்சி உழவர் சந்தை அருகே நீட் எதிர்ப்பு பொதுக்கூட்டத்துக்கு அனுமதி கேட்டு டிடிவி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
ஆனால் அந்த இடத்தில் அன்றைய நாளில் வேறு ஒரு நிகழ்ச்சி நடைபெற உள்ளதால் டிடிவி தினகரன் தரப்புக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
எனவே திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் டி.டி.வி தினகரன் செப்டம்பர் 19-ம் தேதி பொதுக்கூட்டம் நடத்த அனுமதி கேட்டிருந்தார்.
ஏற்கனவே அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், செப்டம்பர் 19-ம் தேதி சீரமைப்பு பணி நடக்க உள்ளதால் கூட்டம் நடத்த மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் டிடிவி தரப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கு விசாரணையின்போது, திருச்சியில் டிடிவி தினகரன் அணி சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்துக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது.
இந்நிலையில், திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் நீட் தேர்வு எதிர்ப்பு பொதுக்கூட்டம் டிடிவி தினகரன் தலைமையில் இன்று தொடங்கியது.