இதுநாள் வரை அரசு எந்த தருணத்திலும் பெரும்பான்மையை இழக்கவில்லை: திமுக வைத்த குற்றச்சாட்டுக்கு அரசு பதிலடி.
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததால் தான், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்னை எடுக்கப்பட்டதாக கூறுவது தவறு எனவும், ஆரம்பம் முதல் தற்போது வரை அரசு அரிதி பெரும்பான்மையுடன் இருப்பதாக தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.
சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழந்ததால் தான், திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உரிமை மீறல் பிரச்னை எடுக்கப்பட்டதாக கூறுவது தவறு எனவும், ஆரம்பம் முதல் தற்போது வரை அரசு அரிதி பெரும்பான்மையுடன் இருப்பதாக தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. சட்டமன்றத்துக்கு குட்கா கொண்டு வந்த விவகாரம் தொடர்பான உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் உள்பட 21 எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த வழக்கு, தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி தலைமையிலான அமர்வில் இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், பெரும்பான்மை குறைவாக இருந்ததால் தான் தி. மு.க வை சேர்ந்த 21 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கப்பட்டதாக கூறுவது தவறு எனவும், ஆரம்பம் முதல் இது நாள் வரை அரசு எந்த தருணத்திலும் பெரும்பான்மையை இழக்கவில்லை எனவும் உரிய விளக்கங்களோடு எடுத்துரைத்தார்.தற்போதைய நிலையில்கூட 124 சட்டமன்ற உறுப்பினர்கள் அரசுக்கு ஆதரவாக உள்ளதாகவும், பேரவையில் தொடர்ந்து பெரும்பான்மையோடு செயல்படுவதாகவும் சுட்டிக்காட்டிய அவர், அவையின் மாண்பை அவமதிக்கும் வகையில் தடை செய்யப்பட்ட குட்கா பொருளை சட்டப்பேரவைக்குள் கொண்டு வந்ததற்காகவே 21 தி. மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலயுறுத்தி சபாநாயகர் உரிமைக்குழு விசாரணைக்கு பரிந்துரைத்ததாகவும் சுட்டிக்காட்டினார்.
தொடர்ந்து ஆஜரான தமிழக அரசின் சிறப்பு மூத்த வழக்கறிஞர் சோமையாஜி, உரிமைக்குழு இந்த பிரச்சினை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் முன்கூட்டியே இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சபையின் கண்ணியத்தை மீறும் வகையில், தடை செய்யப்பட்ட பொருளை கொண்டு வந்தது, உரிமை மீறலா இல்லையா என ஆய்வு செய்யவே சபாநாயகர் இந்த விவகாரத்தை உரிமைக் குழுவிற்கு அனுப்பி வைத்ததாகவும் வாதிட்டார். இந்த பிரச்சினை ஏற்கனவே பலமுறை சட்டசபையில் எழுப்பப்பட்டு, அரசு சார்பில் உரிய பதிலும் அளிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், அரசியல் சாசன பதவியை வகிக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள், அவையின் கண்ணியத்தை காக்க வேண்டும் என, உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள் காட்டி வாதிட்டார். அவரது வாதம் முடிவடையாததால், விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.