இன்றும், நாளையும் சிறப்பு ஏற்பாடு... 9636 பேருந்துகள் இயக்கம்... போக்குவரத்துறை அமைச்சர் திடீர் ஆய்வு...!
கோயம்பேட்டில் பயணிகளின் கூட்ட நெரிசலை கையாள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், தனியார் பேருந்துகளின் வசூலிக்கப்பட்டும் கட்டணங்கள் குறித்தும் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தமிழ்நாட்டில் கொரோணா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுப்பதற்காகவும், நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்தவும். மே 10ம் தேதி காலை 04.00 மணி முதல் 24.05.2021 காலை 4.00 மணி வரை இருவாரங்களுக்கு மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கினை அமல்படுத்திட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
முழு ஊரடங்கு 10.05.2021 முதல் அமல்படுத்தப்படவிருப்பதை முன்னிட்டு, பொது மக்களும், தனியார் துறை தொழில் நிறுவனங்களும் மற்றும் வணிக நிறுவனங்களும் தமக்குத் தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக 08.05.2021 (சனிக்கிழமை) மற்றும் 09.05.2021 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய இரு தினங்களிலும் அனைத்து கடைகளும், தொழில் நிறுவனங்களும், வணிக நிறுவனங்களும் வழக்கம் போல காலை 06.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை இயங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் மேற்கண்ட இரு தினங்களில் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல வசதியாக அனைத்து போக்குவரத்துக்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. வகையானஇந்த சூழ்நிலையினை பயன்படுத்தி தனியார் பேருந்துகள். ஆம்னி பேருந்துகள் பொதுமக்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கக்கூடாது என்று போக்குவரத்து துறை சார்பில் ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீறி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு 6 மாத சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் வரை அபராதமும் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் பயணிகளின் கூட்ட நெரிசலை கையாள மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும், தனியார் பேருந்துகளின் வசூலிக்கப்பட்டும் கட்டணங்கள் குறித்தும் போக்குவரத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழக அரசின் அறிவிப்பால் மாநிலம் முழுவதும் 5460 சாதாரண கட்டணப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என தெரிவித்தார். இன்றும், நாளையும் கூட்ட நெரிசல் சிரமம் இன்றி மக்கள் பயணம் செய்ய ஏதுவாக சிறப்பு பேருந்துகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மொத்தமாக இன்று மற்றும் நாளை என இரு தினங்களில் 9636 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.