நீரா பானத்தை பருகுங்கள்... எம்.எல்.ஏ.க்களுக்கு அட்வைஸ் பண்ணும் சபாநாயகர்...
சட்டப்பேரவை கேன்டீனில் எம்.எல்.ஏ.க்களுக்கு இன்று நீரா பானம் வழங்கப்படும் என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ.க்கள் அதனை பருகி பார்க்கும்படியும் சபாநாயகர் தனபால் அறிவுறுத்தி உள்ளார்.
தென்னை மரங்களில் இருந்து நீரா இறக்கி விற்பனை செய்வது குறித்து கடந்த மாதம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். இந்த அறிவிப்பு விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. உடல் வளர்ச்சிக்கு தேவைப்படும் தாது உப்புகள் நீரா பானத்தில் நிறைந்து காணப்படுகின்றன.
ஒரு தென்னை மரத்தில் இருந்து தேங்காய் உற்பத்தி மூலம் விவசாயிகளுக்கு ஆண்டிற்கு சுமார் ஆயிரம் ரூபாய் வரை வருமானம் கிடைக்கும், நீரா பான உற்பத்தி செய்வதன் மூலம் ஒரு தென்னை மரத்தில் இருந்து ஆண்டு வருமானம் சுமார் ரூ.15 ஆயிரம் வரை கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.
தென்னை விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க, நீரா பானம் மற்றும் மதிப்பு கூட்டுப் பொருட்கள் தயாரிப்புக்கு தமிழக அரசு அனுமதியளிக்கப்பட்டது.
இந்த நிலையில், சட்டப்பேரவை கேன்டீனில் எம்.எல்.ஏ.க்களுக்கு இன்று நீரா பானம் வழங்கப்படும் என சபாநாயகர் தனபால் தெரிவித்துள்ளார். அது மட்டுமல்லாது, எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் அதனை பருகி பார்க்கும்படியும் அவர் அறிவுறுத்தி உள்ளார்.