கருப்பு பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை... தமிழக அரசு பிறப்பித்த தடாலடி உத்தரவு...!
கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த 5000 குப்பி மருந்துகளை வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியாவில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் புதிதாக பெருகி வரும் கருப்பு பூஞ்சை தொற்று மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிமாக கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராஜஸ்தான், ஹரியானா, உத்திரப்பிரதேசம், டெல்லி, ஆந்திரா உட்பட இந்தியா முழுவதும் இதுவரை 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்திலும் இதுவரை 9 பேர் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு ஆளாகியுள்ளதாகவும், அதில் 7 பேர் சர்க்கரை நோயாளிகள் என்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்திருந்தார்.
Amphotericin என்ற மருந்தை கருப்பு பூஞ்சை பாதிப்புக்கு பயன்படுத்தலாம் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பரிந்துரைந்துள்ளது. இந்நிலையில், கருப்பு பூஞ்சை நோயை குணப்படுத்த 5000 குப்பி மருந்துகளை வாங்க தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உத்தரவிட்டுள்ளது. மேலும் தனியார் மருத்துவமனைகள் தங்களுக்கு தேவையான மருந்துகளை அந்தந்த முகமைகள் மூலம் ஏற்பாடு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது.