கட்டுமான நிறுவனங்கள் கவனத்திற்கு... தமிழகத்தில் நாளை முதல் மேலும் சில தளர்வுகள்...!
தமிழகத்தில் மேலும் சில தளர்வுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா 2வது அலை காரணமாக தளர்வுகளுடன் இருந்து வந்த முழு ஊரடங்கு மக்களின் அலட்சியம் காரணமாக மே 24ம் தேதி முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்காக அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் மற்றும் உயிரிழப்போரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. எனவே கொரோனா தொற்று குறைய ஆரம்பித்ததை கருத்தில் கொண்டு ஜூன் 21ம் தேதி வரை மேலும் ஒரு வாரத்திற்கு சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியிருந்தது.
கொரோனா தொற்று குறைவாக உள்ள 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள், அழகு நிலையங்கள் உள்ளிட்டவற்றை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் மக்களின் கோரிக்கைக்கு ஏற்ப பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. நாளை முதல் ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட உள்ள நிலையில், மேலும் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
நாளை முதல் தேநீர் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 பார்சல் மட்டுமே வழங்கும் வசதியுடன் இயங்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது மக்களின் நலன் கருதி, அரசு அலுவலகங்களிலிருந்து சான்றிதழ்கள் மற்றும் சேவைகளைப் பெற இ-சேவை மையங்கள் நாளை முதல் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், அப்பணிகளுக்கான அலுவலகங்கள் இயங்காத நிலையில் பணியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வாங்கும் கட்டுமானப் பொருட்களுக்கு பணம் செலுத்தவும் உள்ள பணித் தேவைகளை கருத்தில் கொண்டு, கட்டுமான நிறுவனங்களின் அலுவலகங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.