தொடங்கியது வாக்கு எண்ணிக்கை... ஸ்டாலினின் கொளத்தூர் தொகுதியில் இருந்து வெளியான அதிர்ச்சி தகவல்...!
கொரோனா 2வது அலை காரணமாக வாக்கு எண்ணும் மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சரியாக 8 மணிக்கு தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 75 வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு வாக்கு எண்ணும் பணி தொடங்கியுள்ளது. முதலில் தபால் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அதன் பின்னர் மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ள போதும், 11 மணிக்கு தான் முன்னிலை நிலவரம் தெரிய வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா 2வது அலை காரணமாக வாக்கு எண்ணும் மையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்றை தவிர்க்க சமூக இடைவெளியுடன் மேஜைகள் போடப்பட்டுள்ளன. வேட்பாளர்கள், முகவர்கள் கொரோனா பரிசோதனை செய்து, நெகட்டிவ் சான்றை சமர்ப்பித்தவர்கள் அல்லது 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு அனுமதிக்கப்பட்டனர். இதுதவிர அவர்களின் உடல் வெப்பநிலையும் பதிவு செய்யப்பட்டது. 98.6 டிகிரிக்கு மேல் வெப்பநிலை பதிவானால் முகவர்கள், தேர்தல் அலுவலர்களுக்கு அனுமதி இல்லை.
இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு சற்று நேரம் முன்னதாக கொளத்தூர் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் மாற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. கொளத்தூர் தொகுதியில் தேர்தல் நடத்தும் அலுவலர் தங்கவேலு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து புதிய அதிகாரியாக கண்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.