திமுக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி மூலம் நெருக்கடி? தலைமைச் செயலர் இறையன்பு பரபரப்பு அறிக்கை..!
துறை ரீதியான செயல்பாடுகள் குறித்து அந்த துறையின் செயலர்களுக்கு அனுப்பிய கடிதம் அவசியமற்ற விவாதப் பொருளாக மாறியிருப்பதாக இறையன்பு தெரிவித்துள்ளார்.
துறை ரீதியான செயல்பாடுகள் குறித்து அந்த துறையின் செயலர்களுக்கு அனுப்பிய கடிதம் அவசியமற்ற விவாதப் பொருளாக மாறியிருப்பதாக இறையன்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என்.ரவி, அறிவிக்கப்பட்டதில் இருந்தே அவர் குறித்த பேச்சுகளும், பரபரப்புகளும் உலா வரத்தொடங்கின. முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி என்பதால் தமிழ்நாடு அரசுக்கு நெருக்கடி கொடுக்கவே மத்திய அரசு அவரை நியமித்து இருப்பதாக திமுக கூட்டணி கட்சிகளின் தலைவர்களே குற்றஞ்சாட்டினர். தொடக்கம் முதல் ஆளுநர் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காத ஸ்டாலின் தலைமையிலான அரசு, ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் இணக்கமான போக்கையை கடைபிடித்து வருகிறது.
ஆளும்கட்சியுடன் ஆளுநர் ரவி சுமூகமாக நடந்துகொண்டாலும், எதிர்க்கட்சிகளான அதிமுக, பா.ஜ.க. தலைவர்கள் ஆளுநரை சந்தித்தது புகார் அறிக்கைகளை வாசித்ததும் திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் செயல் என்று கூறப்பட்டது. அதேபோல், சட்டம் ஒழுங்கு குறித்து அடிக்கடி விசாரித்த ஆளுநர் அனைத்து துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தலைமைச் செயலருக்கு உத்தரவிட்டதாக தகவல் பரவியது.
சில நாட்களுக்கு முன்னர், அனைத்து துறை செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், 'திட்டங்களின் அமலாக்கம் மற்றும் செயல்பாடுகள் குறித்த விவரங்களை பவர்பாயிண்ட்டில் தயார் செய்து வைக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசுத்துறை செயலாளர்கள் தயாராக இருக்கவும். ஆளுநரிடம் சமர்ப்பிப்பதற்கான காலம் பின்னர் தெரியப்படுத்தப்படும்' என்று அந்த கடித்தத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
தலைமைச் செயலரின் இந்த கடிதம் தமிழ்நாடு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநர் ஆர்.என்.ரவி தனி அரசாங்கம் நடத்த முற்படுவதாக அரசியல் கட்சிகள் குற்றஞ்சாட்டின. இந்தநிலையில் இதுகுறித்து தலைமைச் செயலாளர் இறையன்பு விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், புதிதாக பொறுப்பேற்றுள்ள ஆளுநருக்கு அரசின் திட்டங்கள் குறித்து தெரிவிக்கும் விதமாகவே தரவுகள் திரட்டப்படுகின்றன. நிர்வாகத்தில் வழக்கமான ஒன்றுதான் இந்த நடைமுறை. நிர்வாக ரீதியான கடிதத்தை அரசியல் பொருள் கொண்ட சர்ச்சையாக்குவது சரியானதல்ல. அரசின் நிர்வாக செயல்பாடுகளை உணர்ந்தவர்களுக்கு இது வழக்கமான நடைமுறைதான் என்பது தெரியும். என்று தலைமைச் செயலர் இறையன்பு விளக்கம் அளித்துள்ளார்.