TN bus pass rate hike

சென்னை மாநகர அரசு பேருந்துகளில் ஒரு நாள் பயணம் செய்வதற்கான டிக்கெட் கட்டணம் 50 ரூபாயில் இருந்து 80 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதே போன்று மாதாந்திர பஸ் பாஸ் கட்டணம் 1000 ரூபாயில் இருந்து 1300 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழ அரசு கடந்த மாதம் 20 தேதியில் இருந்து பஸ் கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தியது. பஸ் கட்டண உயர்வால் ஏழை – எளிய மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். பேருந்து கட்டணம் கொடுத்து கட்டுபடியாகாமல் ஏராளமான ஏழைப் பெண்கள் வேலைக்கு செல்வதைக்கூட விட்டுவிட்டனர்.

கல்லூரி மாணவ-மாணவிகள், பொது மக்கள், வியாபாரிகள் என அனைத்து தரப்பு மக்களும் பஸ் கட்டண உயர்வை எதிர்த்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடந்த வாரத்தில் மாநிலம் தழுவிய அளவில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதே நேரத்தில் 100 சதவீதம் உயர்த்தப்பட்ட கட்டணத்தை 10 சதவீதம் அளவுக்கு அரசு குறைத்து உத்தரவிட்டது. ஆனாலும் மக்களிடையே பேருந்து கட்டண உயர்வுக்கு கடும் எதிர்ப்பு இருந்து வருகிறது.

இந்நிலையில் மாதாந்திர மற்றும் டெய்லி பஸ் பாஸ் குறித்து அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாமல் இருந்தது. மாதாந்திர பாஸ்கள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டன. ஆனால் டெய்லி பாஸ்கள் பயணிகளுக்கு வழங்கப்படவில்லை.

ந்நிலையில் இன்று பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தி போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி மாதாந்திர பஸ் பாஸ் ரூ.1000 இல் இருந்து ரூ.1300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு நாள் பயணம் செய்வதற்கான டிக்கெட் ரூ.50 இல் இருந்து ரூ.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டண நடைமுறை சென்னையில் வரும் 8 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது