சட்டம் இயற்ற மக்களிடம் கருத்து கேட்க தேவையில்லை... பாஜக தலைவர் அதிரடி விளக்கம்...!
தேர்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் கருத்தை கேட்காமலேயே சட்டத்தை இயற்றலாம். அதற்கு சட்டத்தில் உரிமை உள்ளது என்று தமிழக பாஜக துணை தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
பாஜக கட்சி சார்பில் வேளாண் சீர்திருத்த மசோதா குறித்து கருத்து கேட்பு மற்றும் விளக்க ஆலோசனை கூட்டம் கோவையில் நடைபெற்றது. இக்கூட்டத்துக்குப் பிறகு பாஜக துணை தலைவர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “மக்களிடம் கருத்து கேட்டுதான் சட்டங்கள் இயற்ற வேண்டும் என்றால் எந்தச் சட்டத்தையும் இயற்ற முடியாது. தேர்தெடுக்கப்பட்ட அரசு, மக்கள் கருத்தை கேட்காமலேயே சட்டத்தை இயற்றலாம். அதற்கு சட்டத்தில் உரிமை உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தொழில்துறைக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தைவிட விவசாயத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். வேளாண் மசோதா குறித்து அதிமுக எம்.பி. கூறிய கருத்துக்கு தமிழக முதல்வர் ஏற்கனவே தெளிவாக விளக்கம் அளித்துள்ளார். மத்திய அரசை பொறுத்தவரை விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிக்கும் எந்த திட்டத்தையும் செயல்படுத்தாது” என்று எனவும் தெரிவித்தார்.