கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

அரசியல் வன்முறைக்கு பெயர் போன மேற்கு வங்காளத்தில் 2019 தேர்தலின் போது பா.ஜனதா, இடதுசாரியினர், திரிணாமுல் காங்கிரசார் இடையே மோதல் காணப்பட்டது. தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா இடையே கடுமையான போட்டி நிலவியது. 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

42 தொகுதிகளில் 18 தொகுதிகளை தன்வசப்படுத்தி திரிணாமுல் காங்கிரசுக்கு பா.ஜனதா அதிர்ச்சி வைத்தியம் அளித்தது. இரு கட்சிகள் இடையே மோதல் போக்கு தொடர் கதையாக இருந்து வருகிறது. 

தேர்தலுக்கு பின்னரும் அரசியல் வன்முறை தொடர்கிறது. இப்போது கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

வடக்கு கொல்கத்தாவின் நிம்தா பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் நிர்மல் குண்டு கடையொன்றில் நின்றுக்கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். 

மோட்டார் சைக்கிளில் பின்புறம் சவாரி செய்தவர் நிர்மல் குண்டுவை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதில் இரு குண்டுகள் அவருடைய உடலில் பாய்ந்துள்ளது. உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் கொண்டு செல்லும் வழியிலே உயிரிழந்தார். இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். 

நிர்மல் குண்டுவை கொலை செய்தது பா.ஜனதாவினர் தான் என திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.