Asianet News TamilAsianet News Tamil

ஊடகத்தினரை இழிவுபடுத்தும் போக்கு அநாகரிகமானது... அண்ணாமலையை விளாசிய டி.கே.எஸ்.இளங்கோவன்!!

ஊடகத்தினரை இழிவுபடுத்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் போக்கு அநாகரிகமானது என்று திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

tks elangovan slams annamalai regarding his statement about media peoples
Author
First Published Oct 28, 2022, 12:10 AM IST

ஊடகத்தினரை இழிவுபடுத்தும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் போக்கு அநாகரிகமானது என்று திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கண்டனம் தெரிவித்துள்ளார். முன்னதாக கடலூரில் ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மரத்து மேல் குரங்கு தாவுவது போல் சுற்றி சுற்றி வருகிறீர்கள் என நிருபர்களை விமர்சித்தார். அதைத் தொடர்ந்து நாய்,பேய், சாராய வியாபாரிக்கெல்லாம் என்னால் பதிலளிக்க முடியாது என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றார். அவரது இந்த கருத்துக்கு திமுக செய்தித்தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் கடும் கண்டனம் தெரிவித்த்ள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்டைக் கடித்து, மாட்டைக் கடித்து, மனிதனைக் கடிக்கிறது என்று தமிழிலே ஒரு சொலவடை உண்டு. அது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலைக்கு முழுப் பொருத்தமாக இருக்கிறது. அரசியலில் மாற்றுக் கருத்து கொண்டவர்களை அநாகரிகமாகவும் தரம் தாழ்ந்த வகையிலும் பேசுவது பாஜக நிர்வாகிகள் பலரது வழக்கமாக இருப்பதை ஊடக விவாதங்களில் பங்கேற்கும் கருத்தாளர்களும் பார்வையாளர்களும் நன்கு அறிவார்கள்.

இதையும் படிங்க: நாய்,பேய், சாராய வியாபாரிக்கெல்லாம் பதிலளிக்க முடியாது..! செந்தில் பாலாஜியை கடுமையாக விமர்சித்த அண்ணாமலை

கட்சியின் மாநிலத் தலைவர் பொறுப்பில் இருக்கும் அண்ணாமலை அந்த அநாகரிகப் படிக்கட்டுகளில் இன்னும் ஒரு படி மேலே சென்று, ஊடகத்தினர் மீது தொடர்ந்து பாய்ச்சலை நடத்திக் கொண்டிருக்கிறார். ஊடகச் சந்திப்புகளில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறும் பாஜக நிர்வாகிகள், அத்தகைய கேள்வி எழுப்புவோரை நோக்கி, ஆன்ட்டி-இண்டியன் என்றும் கெட்-அவுட் என்றும் கொச்சைப்படுத்துவது தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, ஊடகத்தினருக்கு 'ரேட்' போடுவதும், ஏலமிடுவதுமாக பல முறை இழிவுபடுத்தியிருக்கிறார். மாநிலம் தழுவிய அளவில் விளம்பரம் தேடும் ஆர்ப்பாட்டம் நடத்திய அண்ணாமலையிடம் ஊடகத்தினர் கேள்விகள் கேட்டபோது, “மரத்து மேல குரங்கு தாவுற மாதிரி சுத்தி சுத்தி வரீங்களே” என்று மிக மோசமான சொற்களால் வர்ணித்ததுடன், “உங்களைச் சாப்பிட சொல்லிட்டுத்தானே போனேன்”என்று ஊடகத்தினரின் சுயமரியாதையை சுண்டிப் பார்க்கும் வகையில் மேலும் மேலும் கொச்சைப்படுத்தியிருக்கிறார்.

இதையும் படிங்க: கோவை கார் வெடி விபத்து..! பாஜக தலைவர் அண்ணாமலையை தான் முதலில் என்ஐஏ விசாரிக்க வேண்டும்..! செந்தில் பாலாஜி

செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் சொல்வதற்கு வக்கின்றி, நாய்.. பேய்.. என்று ஆளுந்தரப்பை விமர்சித்துள்ளார். கழகத் தலைவரான முதலமைச்சர் பொதுக்குழுக் கூட்டத்தில் பேசும்போது, பாஜகவினர் எந்தளவுக்குத் தரம் தாழ்ந்து செயல்படுவார்கள் என்பதை எச்சரிக்கையுடன் சுட்டிக்காட்டியதை இங்கு நினைவு கூர்கிறேன். அரசியல் கட்சிகளிடம் மட்டுமின்றி, ஊடகத்தினரிடமும் தரம் தாழ்ந்து பேசும் அண்ணாமலையின் தொடர்ச்சியான வாய்ச் சவடால் மூலமாகத் தமிழ்நாட்டின் அரசியல் பண்பாட்டைச் சிதைத்துச் சீரழிக்கும் வேலையை பாஜக மேற்கொண்டு வருகிறது. ஊடகத்தினரை இழிவுபடுத்திய பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலைக்குத் திமுகழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதுடன், தன் செயலுக்காக ஊடகத்தினரிடம் அவர் வருத்தம் தெரிவித்து, இனியாவது நாகரிகமும் பண்பாடும் காத்திட வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios