tirupura ex cm manik sarkar blame Modi he is working for corporates
இந்திய மற்றும் பன்னாட்டு கார்ப்பரேட் கம்பெனிகளின் முதலாளிகளின் வளமான வாழ்க்கைக்காக பிரதமர் நரேந்திர மோடி ஓடி ஓடி உழைக்கிறார் என திருவாரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திரிபுரா மாநில முன்னாள் முதலமைச்சர் மாணிக்சர்க்கார் குற்றம்சாட்டியுள்ளார்.
திருவாரூர் தெற்கு வீதியில் விவசாயத் தொழிலாளர் சங்க மாநாடு நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய மாணிக் சர்க்கார், தேர்தல் காலங்களில் நாட்டு மக்களின் துன்ப துயரங்கள் குறித்து மிகுந்த அக்கறையோடு கண்ணீருடன் பேசும் பாஜகவினர் தேர்தல் முடிந்ததும் அதனை அறவே மறந்து விட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் நலனுக்காக உழைப்பார்கள் என குற்றம்சாட்டினார். இவர்களின் பிரதமர்தான் நரேந்திரமோடி என்றார்.

ஸ்டெர்லைட் தாமிரஆலையின் வேதாந்தா குழுமத்தின் அதிபர் அனில் அகர்வால் பிரதமர் நரேந்திரமோடியின் நெருங்கிய நண்பர் ஆவார். அதனால்தான் இப்பிரச்சனை குறித்து மோடிவாய்திறக்க மறுக்கிறார். இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிடக்கூட அவருக்கு மனம் வரவில்லை என்றால் இவர்கள் எத்தகைய கொள்கைகளுக்கு ஆதரவானவர்கள் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும் என சரமாரியாக வெளுத்து வாங்கினார்..
தற்போது தமிழகத்தில் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரு கிறது. நானும் எல்லா செய்திதாள்களையும் படித்தேன். ஒரு பத்திரிக்கையில்கூட தூத்துக்குடி தியாகிகளுக்கு இரங்கல் தெரிவித்து சட்டமன்றத்தில் அதிமுக அரசு பேசியதாக செய்தி வரவில்லை. இதுமிகவும் வருத்தம் அளிப்பதாகவும் கண்டனத்திற்கு உரியதாகவும் உள்ளது என்றும் மாணிக் சர்க்கார் தெரிவித்தார்..

தற்போதைய மத்தியஅரசு தாழ்த்தப் பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் மலைவாழ் மக்களுக்கு எதிரான அரசாக செயல்பட்டு வருகிறது. மலைவாழ் மக்களின் வனப்பகுதி கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கப்படுகிறது. இவர்கள் மூலமாக இயற்கை வளங்களும் சூறை யாடப்படுகிறது. மோடி ஆட்சியில் தலித்மற்றும் சிறுபான்மை மக்கள் துன்புறுத்தப் படுகிறார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
உணவு, உடை, பண்பாடு,கலாச்சாரம் ஆகியவற்றை பாஜகவினர் முடிவு செய்கிறார்கள். இதன் காரணமாக இவர்கள் அச்சத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். வளர்ச்சி வளர்ச்சி என்று கூச்சல் போடுகிறார்கள். இந்த நான்கு ஆண்டுகளில் என்ன வளர்ச்சியை தந்துவிட்டார்கள் என கேள்வி எழுப்பினார்.
ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலைதருவதாக கூறி படித்த இளைஞர்களை ஏமாற்றிவிட்டார்கள். இந்த நான்கு ஆண்டுகளில் 8 கோடிபேருக்கு வேலை கிடைக்க வேண்டும். கிடைத்ததா? அனைவரின் வங்கிக்கணக்கிலும் தலா 15 லட்ச ரூபாய் வரவு வைக்கப்பட்டு விட்டதா? என சரமாரியாக மாணிக் சர்க்கார் கேள்வி எழுப்பினார்.
