திருமுருகன் காந்தி திடீர் கைது!
சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜெனிவாவில், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று கடந்த சில தினங்களாக மதிமுக பொது செயலாளர் வைகோ பேசி வருகிறார்.
வைகோ, செய்தியாளர்களின் சந்திப்பின்போது, இலங்கையைச் சேர்ந்த சிலர் அவரை தாக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இலங்கையைச் சேர்ந்தவர்களின் செயலைக் கண்டித்தும், இது தொடர்பாக இலங்கை அரசை இந்திய அரசு கண்டிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி மதிமுகவினர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
தமிழ்ப்புலிகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் நாகை திருவள்ளுவன் தலைமையில் இந்த போராட்டம் நடத்தப்பட்டது.
அவர்களின் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக, மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, பிரவீன்குமார், சிவகுமார் ஆகியோர் சென்றனர்.
அவர்களை போலீசார் தடுத்து நிறத்தியுள்ளனர். ஆனாலும் அவர்கள் தடையை மீறி போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.
பின்னர் அங்கிருந்து மருத்துவமனை புறப்பட்ட திருமுருகன், பிரவீன் காந்தி, சிவகுமார் ஆகியோர், லயோலா கல்லூரி அருகே கடை ஒன்றில் டீ குடித்துக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த போலீசார், திருமுருகன் காந்தி உட்பட 3 பேரையும் கைது செய்து நுங்கம்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.