அரசுக்கு எதிராக அடுத்தடுத்து களமிறங்கும் எம்.எல்.ஏக்கள் - திருச்சந்தூர் சட்டமன்ற உறுப்பினர் உண்ணாவிரதம்
டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும்,தொகுதியில் உள்ள குளங்களை தூர்வாரவும் வலியுறுத்தி திருச்சந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது, வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் தமிழக விவசாயிகள் கடந்த மாதம் 14–ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தினமும் நூதன முறையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதில் நேற்று அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் வகையில், சேலை அணிந்து போராட்டம் மேற்கொண்டனர். இதைதொடர்ந்து 33 வது நாளான இன்று தாலியறுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், தொகுதியில் உள்ள குளங்களை தூர்வாரவும் வலியுறுத்தி திருச்சந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் உண்ணாவிரத போராட்டம் மேற்கொண்டுள்ளார்.
இப்போராட்டத்தை நடத்துவதற்கு காவல் துறையினர் அனுமதி கொடுக்காததால் கடும் வாக்குவாதம் நடைபெற்றது. காவல்துறையின் எதிர்ப்பை மீறி அனிதா ராதாகிருஷ்ணன் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதனிடையே அரசு திட்டங்களை நிறைவேற்ற அரசு அதிகாரிகள் ஒத்துழைப்பு தரவில்லை எனகூறி அதிகாரிகளை கண்டித்து கடந்த வியாழக்கிழமை திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ குணசேகரன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.