சோதனை...க்கு... தினகரன் உதிர்த்த முத்துகள்..!
ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வெள்ளிக்கிழமை நேற்று இரவு தொடங்கி, 4 மணி நேரம் நீடித்த சோதனை இன்று அதிகாலை 2 மணி அளவில் நிறைவுபெற்றது. இருப்பினும், ஜெயலலிதாவின் அறையில் சோதனை நடத்த சசிகலா தரப்பினர் அதிகாரிகளை அனுமதிக்கவில்லை. எனினும் இந்த சோதனை நீதிமன்ற அனுமதி பெற்று நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இங்கே சோதனை நடக்கும் தகவல் தெரிந்ததும் இரவு, 10:30க்கு வந்தார் விவேக். சோதனைக்கு பின் அவர் தெரிவித்தபோது, ஜெயலலலிதா வாழ்ந்த வீடு கோவில் போன்றது. இங்கு சோதனை நடத்தியது வேதனை அளிக்கிறது. ஜெயலலிதா அறையில் சோதனை நடத்த நாங்கள் அனுமதிக்கவில்லை. சோதனைகளின்போது சில கடிதங்கள், 2 பென் டிரைவ், ஒரு லேப்டாப்பை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர் என்று கூறினார்.
இதனிடையே இந்த சோதனை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், ஜெயலலிதா வீட்டில் இருந்து ஐடி., அதிகாரிகள் இரண்டு லேப்டாப்களை எடுத்துச் சென்றனர் என்று கூறினார்.
முன்னர் கடந்த வாரம் சசிகலா உறவினர்களை மையமாக வைத்து நடந்த சோதனைகளின் போது, எங்கயும் எதுவும் கிடைக்காது... நீங்க எங்க வேணாலும் தேடிக்கிங்க.. என்றார் தினகரன். அப்போது, அவர் சோதனைக்கு வர்றவங்க எதையாச்சும் வெச்சி எடுத்தாங்கன்னா என்ன செய்யிறது என்று கேட்டார், தன் புதுச்சேரி பண்ணை வீட்டில் சோதனைக்குச் சென்றவர்களை திருப்பி அனுப்பியபடி..!
இந்த நேரத்தில் தினகரன் உதிர்த்த முத்துகள் பொது மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அரசியல்வாதி என்ன கோவணம் கட்டிக் கொண்டிருக்க வேண்டும் என எதிர்பார்க்கிறார்களா? என்றும், நாங்கள் என்ன காந்தியின் பேரனா என்றும் கேட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இப்போது, ஜெயலலிதா வாழ்ந்த இல்லத்தில் வருமான வரி சோதனைகள் நடைபெற்ற நிலையில், தினகரன் உதிர்த்த முத்துகள் இவை...
அம்மாவின் நண்பன் என்று சொல்லிக் கொள்ளும் மோடி, அம்மாவை அப்போலோவில் வந்து பார்கக வில்லை. ஆனால் கருணாநிதியைப் போய்ப் பார்த்தார்.
1996இல் நரசிம்ம ராவ் இதைப் போல் போயஸ் இல்லத்தில் ஐடி., ரெய்டு விட்டார். அதன் பின் அவர் காணாமல் போனார்.
வருமான வரித்த்துறை அதிகாரிகள் நிதி அமைச்சகத்தால் மற்றப் படுகின்றனர்.
அதனால் அரசியல் இல்லை என்று சொல்ல முடியாது
ஓபிஎஸ்., ஈபிஎஸ் தாங்கள் சிறைக்குச் செல்லாமல் தப்பிக்க நினைக்கிறார்கள்.
காலம் பதில் சொல்லும்.
ஜெயலலிதா இல்லமான போயஸ் கார்டனில் சோதனை நடத்தப்பட்டதில் சதி உள்ளது.
சேகர் ரெட்டி வீட்டிலிருந்தது போல ஜெயலலிதாவின் அறையில் வைரக் குவியலோ, தங்கக் குவியலோ இல்லை.
பாழாய்ப் போன இரண்டு லேப்டாப்களை எடுத்துச் சென்றுள்ளனர்.
இதுபோன்ற எந்த நடவடிக்கைக்கும் அச்சுறுத்தல்களுக்கும் பயப்பட மாட்டேன்.