மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியை கவிழ்க்க சதி.. சட்டமன்றத்தில் நாராயணசாமி ஆவேசம்.
புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. புதுச்சேரி மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக தரவில்லை, புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டு தடுக்கிறது
மக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள் ஒன்றிணைந்து ஆட்சியைக் கவிழ்க்க சதி செய்கிறார்கள் என புதுவை முதல் அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். காங்கிரஸ் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான சட்டமன்ற கூட்டத்தில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ்-திமுக கூட்டணி பெரும்பான்மையுடன் ஆட்சி செய்தது, இந்நிலையில் திடீரென காங்கிரஸ் எம்எல்ஏ தனது கலந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். சமீபத்தில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ் இருவரும் தங்கள் எம்எல்ஏ பதவியை அடுத்தடுத்து ராஜினாமா செய்தனர். இதனால் காங்கிரஸ் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை குறைந்தது. தற்போது 28 எம்எல்ஏக்களை கொண்ட சட்டப்பேரவையில் காங்கிரஸ் ஆட்சிக்கு 14 எம்எல்ஏக்கள் ஆதரவு மட்டுமே உள்ளது. ஆனால் பெரும்பான்மைக்கு 15 எம்எல்ஏக்கள் தேவை.
எதிர்க்கட்சி வரிசையில் என்.ஆர் காங்கிரஸ் கட்சிக்கு 7 அதிமுகவுக்கு நாலு பாஜகவுக்கு 3 என 14 எம்எல்ஏக்கள் உள்ளனர். காங்கிரஸ் ஆட்சி பெரும்பான்மை இழந்துவிட்டதாக ஆளுநரிடம் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் 14 பேரும் கையெழுத்திட்டு மனு அளித்தனர். இதனையடுத்து பிப்ரவரி 22ஆம் தேதி இன்று சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மை நிரூபிக்குமாறு முதல்வர் நாராயணசாமிக்கு ஆளுநர் தமிழிசை கெடு விதித்துள்ளார். இந்நிலையில் ராஜ்பவன் தொகுதி எம்எல்ஏ லட்சுமி நாராயணன், சபாநாயகர் சிவக்கொழுந்துவை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கியுள்ளார். இதனால் நாராயணசாமி ஆட்சிக்கு மேலும் நெருக்கடி அதிகரித்துள்ளது. இதற்கிடையே புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி திமுக எம்எல்ஏ அவர்கள் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
திமுக எம்எல்ஏ வெங்கடேசன் ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் திமுக கூட்டணியின் பலம் 12 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில் இன்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையில் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள் கூட்டணி கட்சி பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக சட்டமன்றம் கூடியது, அப்போது முதல்வர் நாராயணசாமி பெரும்பான்மையை நிரூபிக்க சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார். அப்போது பேசிய அவர் கூறியதாவது: கடந்த 6 ஆண்டுகளாக எங்களை எதிர் கொள்ள முடியாது எதிர்க்கட்சிகள் தற்போது அஸ்திரங்களை எடுத்துள்ளனர். மாநில பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் 95% நிறைவேற்றி முடித்திருக்கிறோம், மாநிலத்தின் வருமானத்தை தடுக்க வேண்டும் என்று சதி திட்டம் தீட்டினார்கள்.
புதுச்சேரி மக்கள் எங்கள் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. புதுச்சேரி மாநிலத்திற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு முறையாக தரவில்லை, புதுச்சேரி மாநிலத்தின் வளர்ச்சியை மோடி தலைமையிலான அரசு திட்டமிட்டு தடுக்கிறது. பல்வேறு கோரிக்கைகளை மத்திய அரசு செவி சாய்க்கவில்லை, வேண்டுமென்றே தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது. புதுச்சேரியில் காங்கிரஸ் அரசுக்கு பெரும்பான்மை உள்ளது. காங்கிரஸ் அரசு கொரோனா காலத்தில் மிக சிறப்பாக செயல்பட்டது. கிரண்பேடி அளித்த நெருக்கடியையும் தாண்டி ஆட்சியை நிறைவு செய்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.