இன்னொரு புரட்சி வெடிப்பதற்குள் விழித்துக் கொள்ளுங்கள்... தமிழக அரசை எச்சரித்த கௌதமன்...!
தூத்துக்குடியில் உருவான இந்த தன்னெழுச்சி போராட்டம் இன்னொரு மெரினா ஜல்லிக்கட்டு புரட்சியாக தமிழகம் முழுவதும் வெடிப்பதற்குள் தமிழக அரசு விழித்துக் கொள்ள வேண்டும் என்று இயக்குநர் கௌதமன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாகவும், நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாகவும் கூறி அப்பகுதி மக்கள் கடந்த 100 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். வேதாந்த நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கத்தை மேற்கொள்ள இருந்த நிலையில், விரிவாக்கம் செய்யக் கூடாது என்றும் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
ஸ்டெர்லைட் விவகாரம் குறித்து மத்திய - மாநில அரசுகள் எந்த நடவடிக்கை எடுக்காத நிலையில் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 100
நாட்களாக போராட்டம் நடந்து வரும் நிலையில் போராட்டம் நடத்துவதற்கு 144 தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. தடையை மீறி ஆயிரக்கணக்கான மக்கள்
ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று பேரணி சென்றனர். இந்த போராட்டத்தில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். பேரணி சென்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரர்கள் காவல் வாகனத்தை கவிழ்த்தும், கல்லெறிந்தும் நொறுக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவுகிறது. ஆர்ப்பாட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தி கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். இதனால் பேரணியில் சென்றவர்கள் சிதறி ஓடினர். அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ள்னர். இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சி அளிக்கிறது. காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
இந்த போராட்டம் குறித்து இயக்குநர் கௌதமன், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தபோது, சொந்த மண்ணில் தங்களது சொந்தப்
பிரச்னைகளுக்காகப் பொதுமக்கள் கூடியுள்ளனர். 100 நாட்கள் அறவழியில் போராடியும் செவி சாய்க்காததால், அரசுக்கு எதிரான மக்களின் கோபம்
அதிகரித்துள்ளது.
தூத்துக்குடியில் உருவான இந்த தன்னெழுச்சிப் போராட்டம் இன்னொரு மெரினா ஜல்லிக்கட்டுப் புரட்சியாக தமிழகம் முழுவதும் வெடிப்பதற்குள் தமிழக அரசு
விழித்துக்கொள்ள வேண்டும். இனியும் மக்களை அதிகாரத்தின் கை கொண்டு அடக்குவது பயன் தராது என்பதை, மக்களின் இந்த கோபத்தில் இருந்து அரசு
புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், போராட்டக்கார்கள் போலீசாரின் கட்டுப்பாட்டை மீறியும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அப்போது, போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஒருவர் குண்டடிப்பட்டு உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.