தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கு…. சிபிசிஐடிக்கு மாற்றம்….
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி கடந்த 22 ஆம் தேதி நடைபெற்ற பேரணியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். தூத்துக்குடி போலீசார் விசாரித்த வந்த இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு கண்டனம் தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து சில நாட்களாக பதற்றம் நீடித்தநிலையில், தற்போது இயல்பு நிலை திரும்பத் தொடங்கி உள்ளது. அங்கு விதிக்கப்பட்டிருந்த 144 தடைச் சட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
தற்போது அங்கு கடைகள் திறக்கப்பட்டுள்ளன, பேருந்துகள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடத் தொடங்கியுள்ளன.
இந்த நிலையில், பொதுமக்களின் உணர்வுகளுக்கும், கருத்துகளுக்கும் மதிப்பு அளிக்கும் வகையில், ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக மூட தமிழக அரசு நேற்று உத்தரவிட்டது. இது தொடர்பான அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதையடுத்து ஸ்டெர்லைட் ஆலை நேற்று சீல் வைக்கப்பட்டது. இதற்கிடையே, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி டி.கே. ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி போலீசார் விசாரித்து இந்த வழக்கை விசாரித்து வந்த நிலையில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.