this tn government will remain until 2019 due general elections
தமிழகத்தில் நடைபெற்று வரும் எடப்பாடி ஆட்சியை கலைக்க வேண்டும், துரத்த வேண்டும், கவிழ்க்க வேண்டும் என்று பல தரப்பும் முண்டியடித்து வரும் நிலையில், 2019 வரை இந்த அரசு நீடித்திருக்கும் என்று தெரிகிறது.
ஜெயலலிதா மறைந்த பின்னர், ஓ.பன்னீர்செல்வம் முதல்வரான போது பெரிதும் எதிர்ப்பு எழவில்லை. காரணம், தான் சிறைக்குச் சென்ற போது தனக்கு பதிலாக ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வத்தைத்தான் நியமித்தார். எனவே, ஜெயலலிதா இல்லாத நிலையில், ஓபிஎஸ்.,ஸை ஏற்றுக்கொள்வதில் மக்களும் சரி, கட்சியினரும் சரி பெரிதும் எதிர்ப்பு காட்டவில்லை. ஆனால், பின்னர் அதிமுக., கட்சிக்குள் சசிகலா உருவில் வந்த சிக்கலால், ஓபிஎஸ்., வெளியேறி, கூவத்தூர் கூத்து நடந்தபோது, மக்கள் பெரிதும் வெறுப்படைந்தார்கள். அதன் பின்னர் எடப்பாடி வந்தபோதும், தினகரன் தலையீடும், எடப்பாடி அரசு மீது ஓபிஎஸ்ஸே ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதும் என, மக்கள் மேலும் வெறுப்படைந்தார்கள். இத்தகைய சூழலில் மீண்டும் பன்னீர்செல்வமும் எடப்பாடியும் சேர்ந்து ஆட்சியில் அமர்ந்தது, ஜெயலலிதா மரண விவகாரத்தில் அமைச்சர்கள் ஒவ்வொருவராக மாற்றி மாற்றிப் பேசுவது இவற்றை எல்லாம் கண்டதும், மக்கள் வெறுப்பின் உச்சத்துக்கே சென்றார்கள்.
இதனிடையே, இந்த ஆட்சி கலைக்கப்பட வேண்டும் என்று எதிர்க் கட்சியினரும், முதல்வர் மாற்றப்பட வேண்டும் என்று எதிர்த்தரப்பான தினகரன் ஆதரவாளர்களும் ஒரு பக்கம் முயற்சி எடுக்க, மத்திய அரசின் தயவில் இந்த ஆட்சி எப்படியும் 2019 வரை நீளும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக, குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் தேர்தல்களில், பாஜக., வேட்பாளர்களுக்கு ஆதரவு தேவைப்படுவதால், அதிமுக., உறுப்பினர்களை அரவணைத்துச் சென்று,அந்தத் தேர்தல் முடியும் வரை மாநில அரசு கலையவிடாமல் மத்திய அரசு பார்த்துக் கொள்ளும் என்று கூறப்பட்டது. அதுபோலவே இப்போதும் நடந்து வருவதால், அடுத்த இலக்காக 2019 வரை மாநில அரசு நீடித்திருக்கும் என்கிறார்கள். அதற்குக் காரணமாகக் கூறப்படுவது, மாநில மற்றும் பொதுத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தினால் செலவு குறையும் என்று தேர்தல் ஆணையம் பரிந்துரைத்ததுதான்!
இதனை உறுதிப் படுத்துவது போல், இன்று “ 2019 முதல் சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்"என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கடிதம் எழுதி உள்ளார்.
மத்தியில் ஆளும் பாஜக., அரசும் இந்தக் கோரிக்கையை ஆதரிக்கிறது. இது தொடர்பான மத்திய அரசின் யோசனைக்கு தேர்தல் ஆணையமும் கடந்த ஆண்டு தனது ஆதரவைத் தெரிவித்தது. நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்றால், நாடாளுமன்றத்தின் ஆயுள் காலத்துக்கு ஏற்ப, நாட்டில் உள்ள மாநில சட்டசபைகளில் சிலவற்றின் ஆயுளை நீட்டிக்கவும் வேண்டி வரும், அல்லது சில சட்டசபைகளின் ஆயுளை முன்கூட்டியே முடிக்கவும் வேண்டி வரும். இதற்கு அரசியல் சட்ட திருத்தம் தேவைப்படுமென தேர்தல் ஆணையம் கூறுகிறது.
இந்நிலையில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில், “2019 முதல் சட்டமன்ற தேர்தலையும், நாடாளுமன்ற தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும். ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் பட்சத்தில் மக்கள் வரிப்பணம் மிச்சமாகும். 2019 நாடாளுமன்ற தேர்தலுடன் குறைந்தபட்சம் 20 மாநிலங்களின் சட்ட மன்றத்திற்கும் தேர்தல் நடத்தலாம்” எனக் கூறியுள்ளார்.
