கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே வந்தால் எளிமையான மருத்துவம் பார்க்க முடியும் என கீழ்பாக்கம் மருத்துவமனையின் முதல்வர் சாந்தி மலர் தெரிவித்துள்ளார்.  

கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் ஆரம்ப கட்டத்திலேயே வந்தால் எளிமையான மருத்துவம் பார்க்க முடியும் என கீழ்பாக்கம் மருத்துவமனையின் முதல்வர் சாந்தி மலர் தெரிவித்துள்ளார். சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் மற்றும் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், ஜப்பான் பன்னாண்டு நிதி மையம் சார்பில் 7 அரசு மருத்துவ கல்லூரி மருத்துமனை மேம்படுத்துவதற்காகவும், 11 மாவட்ட அரசு பொது மருத்துவமனை மேம்படுத்துவதற்காகவும் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளது என்றார். இதற்கான திட்ட செலவு 1634 கோடியாகும் என்ற அவர், 3 பெரிய மருத்துவமனைகளுக்கான இனைப்பு கட்டிடம் புதிதாக கட்ட இருப்பதாகவும் கூறினார். 

மேலும், 18 மருத்துவமனைகளை மேம்படுத்துதல் பணியும் துவங்கப்பட்டுள்ளது எனவும், வட சென்னை மக்களுக்கு பயன்தரும் வகையில் 275 கோடி மதிப்பில் கீழ்பாக்க மருத்துவமனை காலி வளாகத்தில் கட்டிடம் கட்டப்பட்டு ஆகஸ்ட் 2022 ல் 500 படுக்கை வசதிகளுடன் இயங்க உள்ளது என்றார். இதையடுத்து பேசிய கீழ்பாக்கம் மருத்துவமனை முதல்வர் சாந்தி மலர், கரும்பூஞ்சை நோய்க்கு தமிழகம் முழுவதும் 1434 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை கீழ்பாக்கம் மருத்துவமனையில் 10 பேர் கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு இருப்பதாக கூறினார். மேலும், கொரோனோ இல்லாமல் சிலரும், ஒரு சிலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் சிறிது நாள்களுக்கு பிறகு கரும்பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றார். 

ஆரம்ப கட்டத்திலேயே கரும்பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு வந்தால் அவர்களுக்கு எளிமையான மருத்துவம் பார்க்க முடியும் என்றார். தலைவலி, மூக்கடைப்பு, மூக்கில் தண்ணீர் வடிதல் போன்ற அறிகுறி இருந்தால் பரிசோதனை செய்ய வேண்டும் என கூறினார். மேலும், கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்ப உள்ள நோயாளிகளிடம் அமைச்சர் மா. சுப்பிரமணியன் நலம் விசாரித்தார்.