இது அரசியல் செய்யும் நேரமல்ல.. அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டிய நேரம் - அமைச்சர் ஆவேசம்.
இறப்பு சதவிகிதத்தை குறைத்து காட்டவில்லை, அரசியல் செய்யும் நேரமில்லை, அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது.அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைதன்மையோடு செயல்பட்டு வருகிறோம்.
சென்னை பெரியார் திடலில் உள்ள சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், திராவிட கழகத் தலைவர் கி. வீரமணி ஆகியோர் திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது கி. வீரமணி கூறியதாவது,
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இதுவரை தமிழக அரசு 49 சித்த மருத்துவ முகாம்களை திறந்துள்ளது, தற்போது பெரியார் திடலில் 50-வது சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. 25 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட மருத்துவர்கள் இங்கு பணிபுரிவார்கள் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:
முதலாம் அலை இருந்த போது 13 சித்த மருத்துவமனைகள்தான் இருந்தது தற்போது 50 மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளது. சித்த மருத்துவம் கோருபவர்களுக்காகவே சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறக்கப்பட்டு வருகிறது. இறப்பு சதவிகிதத்தை குறைத்து காட்டவில்லை, அரசியல் செய்யும் நேரமில்லை, அனைவரும் ஒன்று சேர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது.
அனைத்து செயல்பாடுகளிலும் வெளிப்படைதன்மையோடு செயல்பட்டு வருகிறோம். கோவில் சொத்துக்களை கூட இணையதளத்தில் வெளியிட்டு, வெளிப்படை தன்மையோடு அரசு செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்ற கோரிக்கை விடுத்தபோது எதிர்கட்சிகளை, நீங்கள் என்ன மருத்துவர்களா என கேள்வியெழுப்பினர், ஆனால் தற்போது தமிழக முதலமைச்சர் அனைத்து கட்சிகளையும் ஒன்றினைத்து செயல்படுகிறார் என தெரிவித்தார்.