கரையிலிருந்து 5 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால்தான் மீன்பிடிக்க வேண்டும்; பெரிய படகுகள் ஒரு இலட்சம் ரூபாய்க்கும், சிறிய படகுகள் பத்தாயிரம் ரூபாய்க்கும் மட்டுமே மீன்பிடிக்க அனுமதி என வகுக்கப்பட்டிருக்கிற விதிமுறைகளாலும், கெடுபிடிகளாலும் மீனவர்களது வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. 

மீன்பிடி முறைமையையொட்டி மீனவர்களிடம் எழுந்திருக்கும் முரண்பாட்டைப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்க்க தமிழக அரசு முன்வர வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு விவரம்:- 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

மீன்பிடி முறைகள் தொடர்பாக தமிழகக்கடலோர மீனவர்களிடம் எழுந்திருக்கும் முரண்பாடுகளையும், வேறுபாடுகளையும் களைந்து அதற்குரிய தீர்வினை நோக்கிக்கொண்டு செல்லாது மெத்தனப்போக்கினை தமிழக அரசு கையாண்டு வருவது வன்மையானக் கண்டனத்திற்குரியது. சூழலியல் சார்ந்தும், வாழ்வியல் சார்ந்தும், பொருளாதாரம் சார்ந்தும் மீன்பிடி தொழில் செய்யும் கடலாடிகளின் மீன்பிடி முறைகள், தமிழகம் முழுவதும் மாவட்டவாரியாக வேறுபட்டது. அதனை முன்வைத்து, தற்போது மீனவர்களிடம் எழுந்திருக்கும் மீன்பிடி முறை மாறுபாடுகளும், மீன் விற்பனை ஒழுங்குமுறை குறித்தப் பிரச்சினைகளும் எளிதாகத் தீர்த்து வைக்கக்கூடிய ஒன்றே! ஆனால், அதனைத் தீர்த்து வைப்பதற்கான முன்னெடுப்புகளை மேற்கொள்ளாது, சிக்கலைப் ஊதிப்பெரிதாக்கிப் பிரித்தாள அரசே துணைபோவது அதிர்ச்சியைத் தருகிறது. இச்சிக்கல் தீர்க்கப்படாமையால் இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீன்பிடித் தொழிலுக்குச் செல்லாது வாழ்வாதாரத்தை இழந்து ஏழ்மையில் தவிக்கின்றனர்.

ஏற்கனவே, மீன்பிடித் தொழிலை நசுக்குகிற வகையிலும், மீனவர்களை மீன்பிடித் தொழிலைவிட்டு அப்புறப்படுத்தும் நோக்கோடும் கொண்டு வரப்பட்டுள்ள கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச்சட்டம் –2020 என்பது முற்றிலும் மீனவர்களின் நலனுக்கும், அவர்களது வாழ்வாதாரத்திற்கும் ஊறு விளைவிப்பதாக இருக்கிறது. மீனவர்களின் வாழ்வியலையும், அவர்களின் பொருளாதாரத்தையும் கணக்கில்கொள்ளாது உருவாக்கப்பட்ட இச்சட்டத்திருத்தம் கடலாடிகளை அத்தொழிலைவிட்டே அப்புறப்படுத்தும் உள்நோக்கோடு வரப்பட்டுள்ள கொடுஞ்சட்டமாகும். கரையிலிருந்து 5 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால்தான் மீன்பிடிக்க வேண்டும்; பெரிய படகுகள் ஒரு இலட்சம் ரூபாய்க்கும், சிறிய படகுகள் பத்தாயிரம் ரூபாய்க்கும் மட்டுமே மீன்பிடிக்க அனுமதி என வகுக்கப்பட்டிருக்கிற விதிமுறைகளாலும், கெடுபிடிகளாலும் மீனவர்களது வாழ்வாதாரம் பெரும் கேள்விக்குறியாகியுள்ளது. இத்தோடு, மீன்பிடித்தொழில் தொடர்பான அனுமதிகளையும், சோதனைகளையும் மத்திய அரசின் கடல்சார் வாரியம் மற்றும் படகுகளை எந்த நேரத்திலும் சோதனை செய்யும் உரிமையை கடற்படைக்கு வழங்குவது போன்று, மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசு கையகப்படுத்திக்கொள்கிற செய்தி பெருங்கவலையைத் தருகின்றது. 

அதனை தமிழக அரசு உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும். மீன்பிடி அனுமதி சிக்கலாய் இதனைப் பாராது, மாநிலத்தின் தன்னுரிமை என்கிற பரந்தப் பார்வையோடு அணுகி, மீட்டெடுத்து மாநிலத்தின் உரிமையையும், மீனவர்களது நலனையும் நிலைநிறுத்த முன்வர வேண்டும். முதன்மையாக, கடல்மீன்பிடி ஒழுங்குமுறைச்சட்டம் – 2020 எனும் இச்சட்டத்தைத் திரும்பப்பெற்று, மீனவர்களின் பிரதிநிதிகளை உள்ளடக்கிய கலந்தாலோசித்தல் மூலம் அச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என மீனவ மக்களிடம் எழுந்திருக்கும் கோரிக்கை மிக நியாயமானது; தார்மீகமானது. அவர்கள் முன்வைக்கும் இக்கோரிக்கையை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஏற்று, வழிமொழிகிறது.ஆகவே, மீன்பிடி முறைகள் தொடர்பாக மீனவர்களிடம் எழுந்திருக்கும் மாறுபாட்டை இருதரப்பு மீனவர்களிடம் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி இருதரப்பும் ஏற்றுக்கொள்ளும்வகையில் ஒரு உடன்பட்டத் தீர்வுக்குக் கொண்டு வர வேண்டும் எனவும், கடல் மீன்பிடி ஒழுங்குமுறைச்சட்டம் – 2020 யைத் திரும்பப் பெற்று, மீனவர்களின் பங்கேற்போடு கூடிய கலந்தாலோசனையைச் செய்து அவர்களது நலனை முன்னிறுத்தும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் எனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என அதில் வலியுறுத்தப்பட்டுள்ளது.