நேற்று முதலமைச்சராக பதவியேற்றுக்கொண்ட எடப்பாடி பழனிச்சாமிக்கு 15 நாட்களுக்குள் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க வேண்டும் என கவர்னர் வித்யாசகர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, பெரும்பான்மையை நிரூபிப்பதற்காக நாளை சட்டசபையின் சிறப்பு கூட்டம் கூடுகிறது. இந்த கூட்டத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது திமுக எம்.எல்.ஏக்கள் அனைவரும் எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேபோல், திமுக கூட்டணி கட்சியான காங்கிரசும் நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எடப்பாடி பழனிச்சாமியை எதிர்த்து வாக்களிக்க முடிவு செய்து இருப்பதாக முதலில் தகவல் வெளியானது.
தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திருநாவுக்கரசர் பெயரில் இயங்கி வரும் டுவிட்டர் கணக்கிலும் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், திருநாவுக்காரசர் முதலில் வெளியான செய்தி தவறு என மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக காங்கிரஸ் வாக்களிக்கும் என சமூக வலைத்தளத்தில் வெளியான தகவல் தவறானது.
டுவிட்டரில் எனக்கு அதிகாரப்பூர்வ கணக்கு கிடையாது. பயன்படுத்தவும் தெரியாது.
காங்கிரஸ் தலைமை அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வாக்களிப்பார்கள்.
நாளை காலை 9 மணிக்கு மீண்டும் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
