“விஜயகாந்த்தை போல் மோடியையும் காலி செய்துவிடுவார் வைகோ” – இளங்கோவன்
திமுக சார்பில் மத்திய அரசை கண்டித்து இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதன்படி ஈரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
500, 1000 ரூபாய் நோட்டு செல்லாது என மோடி கடந்த 8-ந் தேதி அறிவித்ததையடுத்து கடந்த 20 நாட்களாக மக்கள் வங்கிகள் முன்பு தவம் கிடக்கிறார்கள்.
பிரதமர் மோடி கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் அவர் டீ ஆற்றிக் கொண்டிருந்தார் என்கிறார்கள். அப்படி அவர் கஷ்டப்பட்டிருந்தால் மக்கள் படும் கஷ்டத்தை அறிந்திருப்பார். எனவே, இதை வைத்து பார்க்கும்போது மோடி டீ ஆற்றவும் லாயக்கற்றவர். பிரதமர் பதவிக்கும் லாயக்கற்றவராகி விட்டதாக தெரிவித்தார்.
மேலும், வைகோ முதலில் விஜயகாந்தை முதலமைச்சர் ஆக்கி காட்டுவேன் என்று கூறி கூட்டணி வைத்த பின்னர், தே.மு.தி.க. என்ற ஒரு கட்சியே இல்லாமல் போய் விட்டது.
இந்தநிலையில் தற்போது ரூபாய் நோட்டு விவகாரத்தில் மோடி பக்கம் சாய்ந்து அவரது நடவடிக்கையை பாராட்டத் தொடங்கி உள்ள வைகோ மோடியையும் விரைவில் காலி செய்து விடுவார் என இளங்கோவன் தெரிவித்தார்.