2ஜி பொய் வழக்கு போட்டவர்களை தண்டிக்க முடியுமா ? திருமாவளவன் அதிரடி கேள்வி !
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக திமுக மீது பொய் வழக்கு போட்டவர்களை தண்டிக்க முடியுமா என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் தி.மு.க அங்கம் வகித்தபோது, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக ஆ.ராசா இருந்தார் . அப்போது, மொபைல் போன் சேவைகளுக்கான 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக, மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஒதுக்கீட்டினால், அரசுக்கு 1.76 லட்சம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் அதில் குறிப்பிடப்பட்டது. இது குறித்து சி.பி.ஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, கருணாநிதியின் மகளும் ராஜ்யசபா எம்.பி-யுமான கனிமொழி ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டது.
2ஜி வழக்கு தொடர்பான வாதங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. நாட்டையே உலுக்கிய இவ்வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படும் என நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்திருந்தார்.
அதன்படி டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்துக்கு வந்த நீதிபதி , 2 ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் இருந்து ஆ.ராசா- கனிமொழி உள்பட 14 பேரையும் விடுவிப்பதாக அறிவித்தார்.
இந்த தீர்ப்பை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன், இந்தத் தீர்ப்பின் மூலம் திமுக மீது சுமத்தப்பட்ட களங்கம் விலகிவிட்டதாக தெரிவித்தார்.
இந்த பொய் வழக்கால் திமுகவின் ஆ.ராசா, கனிமொழி ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டு பல இன்னல்களுக்கு ஆளாகியதாக கூறினார். தற்போது அவர்கள் இருவரும் விடுவிக்கப்பட்டது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் கூறினார்.
2 ஜி பொய் வழக்கால் கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்ட மன்ற தேர்தல்களில் திமுக தோல்வியை சந்தித்தாக கூறிய திருமாவளவன், இந்த பொய் வழக்கு போட்டவர்களை தண்டிக்கமுடியுமா என கேள்வி எழுப்பினார்.