தேசிய கீதத்தை அவமதித்த ஆளுநர்.! இனியும் பதவியில் நீடிக்க கூடாது.! முற்றுகை போராட்டத்திற்கு தேதி குறித்த திருமா
இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே ஆளுநர் ஆர் என் ரவியின் நோக்கம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஆளுநரும் அரசியல் கட்சியும்
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. கல்லூரி பட்டமளிப்பு விழாக்களில் ஆர்எஸ்எஸ் சித்தாந்தகளை ஆளுநர் பேசி வருவதாக காங்கிரஸ், விடுதலைசிறுத்தைகள், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வருகின்றனர். மேலும் தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பது தான் சரியென கூறியது அனைத்து அரசியல் கட்சிகள் மத்தியில் அத்ர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து ஆளுநர் ஆர் என் ரவிக்கு எதிராக தொடர்ந்து கண்டனங்களை அரசியில் கட்சியினர் பதிவு செய்து வருகின்றனர். இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர் என் ரவி உரை நிகழ்த்துவதற்கான வந்தார். அவருக்கு தமிழக அரசு சார்பாக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
ஆளுநர் பேச்சு- அவைக்குறிப்பில் இருந்து நீக்கம்
இதனையடுத்து தனது உரையை ஆளுநர் வாசிக்க தொடங்கியதும் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் இருக்கைய முற்றுகையிட்டனர். இதனையடுத்து ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர். இதனையடுத்து தனது உரையை வாசித்த ஆளுநர் தமிழ்நாடு அமைதிப்பூங்கா,சமூகநீ்தி, சுயமரியாதை,பெரியார், அண்ணல்அம்பேத்கர்,பெருந்தலைவர்காமராசர், பேரறிஞர்அண்ணா,முத்தமிழறிஞர் கலைஞர், திராவிடமாடல்ஆட்சி ஆகிய வார்த்தைகளை வாசிக்க மறுத்து அடுத்த பக்கங்களுக்கு சென்றார். இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக அரசு ஒப்புதல் அளித்த வாக்கியங்கள் மட்டும் சட்டசபை அவைகுறிப்பில் பதிவு செய்யப்பட வேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஆளுநர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்.
பதவியில் நீடிக்க தகுதியில்லை
இது தொடர்பாக டுவிட்டர் பதிவிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஆளுநரின் நடவடிக்கைகள், அவரின் ஆர்எஸ்எஸ் முகத்தை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. தேசியகீதம் இசைப்பதற்குள் ஆளுநர் பேரவையிலிருந்து வெளியேறியது அவை மீறல் மட்டுமின்றி, தேசியகீத அவமதிப்புமாகும். அவர் இனியும் அப்பதவியில் நீடிக்கத் தகுதியில்லை.
எனவே அவர் பதவி விலக வலியுறுத்தி. சனவரி-13 அன்று விசிக சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும். ஆளுநரின் போக்குகள் ஏற்கனவே திட்டமிட்ட ஒன்றுதான். இந்திய அரசுக்கும் மாநில அரசுக்குமிடையில் முரண்பாடுகளை உருவாக்கி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களின் நோக்கம். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இதையும் படியுங்கள்
அவையில் இருந்து நடையைக் கட்டிய ஆளுநர்..! மாநிலத்தில் இருந்தே வெளியேற வேண்டும்-கே.பாலகிருஷ்ணன்