ஆளுநரின் பேச்சு தேசத்திற்கு நல்லதல்ல..! ஆர்.எஸ்.எஸின் ப்ராடக்ட் தான் ஆர்.என்.ரவி..! திருமாவளவன் விளாசல்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சு தேசத்திற்கும் நல்லதல்ல அவர் வகிக்கும் பொறுப்புக்கும் நல்லதல்ல என விடுதலை சிறுத்தைகள் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆளுநரும் மோதலும்
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் தொடர் மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. மேலும் பாஜக ஆதரவாக செயல்படுவதாக திமுக கூட்டணி கட்சிகளும் விமர்சித்து வருகின்றன. ஏற்கனவே தமிழக ஆளுநருக்காக ஒதுக்கப்பட்ட ராஜ்பவனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் வலியுறுத்தி இருந்தனர். இந்தநிலையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் தேசிய வீட்டுவேலை தொழிலாளர் இயக்கம் சார்பில் குழந்தை தொழில் முறை ஒழிப்பு தினம் முன்னிட்டு மனித சங்கலி ஆர்ப்பாட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த திருமாவளவன், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டத்தில் உள்ள வயது வரம்பு 18 ஆக உயர்த்த வேண்டும் என்றும்
நகர்ப்புறங்களில் காலி செய்யப்படும் குடிசைப் பகுதியில் உள்ள குழந்தைகளின் கல்வியை கருத்தில் கொள்ளாமல் அதிகாரிகள் அரசியல்வாதிகள் உள்ளனர் என கூறினார்.
100% ஆர்எஸ்எஸ்
குழந்தைகள் கல்வி மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்கு பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் வீட்டு வேலை செய்பவர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 80 ரூபாய் என்று சம்பளம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்றார். மேலும், நபிகள் நாயகத்தை பற்றி தவறாக பேசிய பாஜக செய்தி தொடர்பாளர் நுபுல் சர்மாவையும், நவீன் ஜிண்டாலையும் கைது செய்தால் மட்டுமே போராட்டம் நடக்காது. அவர்கள் மத வெறுப்பு அரசியலை திணிக்கிறார்கள், வெறுப்பு அரசியலுக்கு எதிராக தான் மக்கள் போராடுகிறார்கள் என தெரிவித்தார். சனாதன தர்மம் தான் இந்தியாவை உருவாக்கியது என்று ஆளுநர் ரவி பேசிய கருத்துக்கு பதில் அளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ஆளுநர் 100 விழுக்காடு ஆர்எஸ்எஸ் ப்ராடக்ட். ஆர்எஸ்எஸ் மூலம் உருவாக்கப்பட்ட ஆளுமை.ஆளுநர் பேசுவது இந்த தேசத்திற்கு நல்லதல்ல அவர் வகிக்கும் பொறுப்புக்கும் நல்லதல்ல என திருமாவளவன் தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
தமிழகத்தில் எதிர்கட்சியாக செயல்படுவது யார்? பாஜக நிர்வாகியின் பேச்சுக்கு ஓபிஎஸ் பதிலடி