அப்போ ‘அம்மா’ என்றார்கள்... இப்போ ‘ஜெயலலிதா’ என்கிறார்கள்... நீதிபதி வைத்தியநாதன் வேதனை!
ஜெயலலிதாவை தனது தாய் என அறிவிக்கக் கோரும் வழக்கில், பெங்களூரைச் சேர்ந்த அம்ருதா தாக்கல் செய்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்த உயர் நீதிமன்றம், இன்று விசாரணையை தொடங்கியது.
ஜெயலலிதா மகள் என்று கூறி அம்ருதா தொடந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சில கேள்விகளையும் முன்வைத்தது. இந்த வழக்கில், அம்ருதா சார்பில் மூத்த வழக்கறிஞர் பிரகாஷ் ஆஜராகி வாதிட்டார்.
அப்போது, ஜெயலலிதாவின் ரத்த மாதிரி அப்பலோவில் இருக்கிறதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார். காரணம், ஜெயலலிதாவின் உடலைத் தோண்டி எடுத்து டிஎன்ஏ., சோதனை நடத்த வேண்டும் என்று அம்ருதா கோரியிருந்தார். இதனால், அதற்கு முன்னதாக, மருத்துவ மனையில் ஜெயலலிதாவின் ரத்த மாதிரிகளை வைத்திருக்கிறார்களா என்று அறிய விரும்புவதாக நீதிபதி கோரினார்.
மேலும், ஜெயலலிதாவை அம்மா என்று மட்டும் அம்ருதா உரிமை கோருவது ஏன் என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, ஷோபன் பாபுவை தனது அப்பா என்று அம்ருதா கூறுவதை எது தடுக்கிறது என்றும் கேட்டார்.
மேலும், ஜெயலலிதாவை அம்மா என்று உரிமை கோரும் விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கூறிய நீதிபதி பொதுவாக சில கேள்விகளையும் கருத்துகளையும் முன் வைத்தார். ஜெயலலிதா குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தாக வேண்டும் என்று கூறிய அவர், ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அவருடன் இருந்தவர்கள், கட்சியினர் உள்ளிட்டோர் நடந்து கொள்ளும் விதம் குறித்தும் அதிருப்தி வெளியிட்டார்.
அப்போது அவர், உயிருடன் உள்ளபோது அம்மா என்றவர்கள் இறந்ததும் ஜெயலலிதா என்கிறார்கள் என்று வேதனை தெரிவித்த நீதிபதி, காலையில் மாலை அணிவித்து, மாலையில் காலை வாரும் நிலைமை உள்ளதாக வேதனைப் பட்டார்.
மேலும் காலை வாரும் நிலை தான் தமிழகத்தில் உள்ளது என்றும், தமிழகத்தின் தலையெழுத்து இது என்றும் குறிப்பிட்டார்.
நீதிபதியின் இந்தக் கருத்துகள் இன்று காலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.