பொத்தாம் பொதுவாக குத்தம் சொல்லாதீங்க.. இனி தமிழகத்தில் மின் தடை இருக்காது.. அமைச்சர் செந்தில் பாலாஜி உறுதி..!
மின்தடை தொடர்பான புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். மின்வாரிய அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை கண்ணியமாக நடத்த வேண்டும்.
விவசாயிகளுக்கே மின் இணைப்பு கொடுக்காமல் மின் மிகை மாநிலம் என அதிமுக கூறிவந்துள்ளது என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், அமைச்சர் மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, செந்தில்பாலாஜி மற்றும் மின்வாரிய அதிகாரிகள், பொறியாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி;- மின்வாரியம் வாங்கிய கடனுக்கான வட்டித் தொகையில் ரூ.2,000 கோடியை குறைக்க முதலமைச்சர் நடவடிக்கை எடுத்துள்ளார். புதிய மின் திட்டங்களை விரைந்து கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். மின்தடை தொடர்பான புகார்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும். மின்வாரிய அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களை கண்ணியமாக நடத்த வேண்டும். மின் கட்டணம் செலுத்த 3 வகையான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
மேலும், தமிழகம் முழுவதும் கடந்த 19ம் தேதி மேற்கொள்ளப்பட்ட மின்வாரியப் பணிகள் முழுமையாக நிறைவடைந்தது. இனி மாதாந்திர பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும். மின் கணக்கீடு முறையில் தவறு இருந்தால் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். மின் இணைப்பு எண்ணுடன் குறைகளை இணையத்தில் பதிவிட்டால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்தில் இனி மின் தடை இருக்காது; பராமரிப்பு பணிகள் மட்டுமே நடைபெறும் என்றார்.
திமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 2,04,000 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டது. 10 ஆண்டுகளில் அ.தி.மு.க ஆட்சியில் 2,08,000 விவசாயிகளுக்கு மட்டும இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விவசாயிகள் இலவச மின்சாரத்திற்காக விண்ணப்பித்து காத்திருக்கிறார்கள். விவசாயிகளுக்கே மின் இணைப்பு கொடுக்காமல் மின் மிகை மாநிலம் என கூறிவந்துள்ளது அதிமுக என்று தெரிவித்தார்.