மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து விலகிய பத்மபிரியா, திமுகவில் தான் சேர்ந்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.   

யூடியூப் பிரபலமாக இருந்தவர் பத்மபிரியா. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசின் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு குறித்து வீடியோவில் மத்திய அரசை விமர்சித்து யூடியூபில் வெளியிட்டார். அந்த வீடியோ வைரல் ஆனது. பதம்பிரியாவுக்கு பாஜகவினர் சிலர் கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால், அவருடைய பேச்சு அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதன்பின்னர் அந்த வீடியோவை யூட்யூப் பக்கத்திலிருந்து பதம்பிரியா நீக்கினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த நிகழ்வுக்கு பிறகு தமிழகத்தில் அறியப்பட்டவரானார் பத்மபிரியா. அதனையடுத்து பத்மபிரியா மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். அவருக்கு மாநில சுற்றுச் சூழல் அணிச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மபிரியா 34,000-க்கும் அதிகமான வாக்குகள் பெற்றார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மக்கள் நீதி மய்யம் கலகலத்தது. கட்சியிலிருந்து ஒவ்வொரு நிர்வாகியாக விலகத் தொடங்கினர். அப்போது பத்மபிரியாவும் மநீமவிலிருந்து விலகினார்.


இந்நிலையில் மநீமவிலிருந்து விலகிய மகேந்திரன் திமுகவில் இணைந்தார். அருடன் சேர்ந்து பத்மபிரியாவும் திமுகவில் சேர்ந்தார். இதனையடுத்து அவரை சமூக வலைத்தளங்களில் பலரும் விமர்சித்தனர். இந்நிலையில் திமுகவில் சேர்ந்தது குறித்து பத்மபிரியா விளக்கம் அளித்துள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அரசியல் என்பது பெரும் கடல். இதுவரை ஏட்டுப்பாடத்தில் படித்ததையே நம்பிய நான், அனுபவப் பாடம் படிக்கத் தொடங்கி இருக்கிறேன். பெரியார் சொன்ன பகுத்தறிவின்படி, திராவிட அரசியலின் மாண்பையும், முக்கியத்துவத்தையும் இப்போதுதான் உணர்கிறேன். அதன்படி, மக்கள் பணி செய்ய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், மருத்துவர் மகேந்திரன் வழிகாட்டுதலின்படி கழகத்தில் இணைத்துக்கொண்டேன்” என்று பத்மபிரியா தெரிவித்துள்ளார்.