The victory of the Truth - Mafa. Pandiyarajan

ஜெ. மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் கூறியதை அடுத்து, அணிகள் இணைப்புக்கான முயற்சியை வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டிய நேரம் கனிந்துள்ளதாக முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கூறியுள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க விசாரணை குழு அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.

பிளவுபட்ட அதிமுக அணி, இணைவதற்கான முயற்சிகள் இரண்டு அணியினராலும் மேற்கொள்ளப்பட்டன. ஓ.பி.எஸ். அணியினர், அணி இணைப்பு குறித்து பேசும்போது, சசிகலாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வைத்திருந்தார்.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நேற்று கடலூரில் நடைபெற்றது. அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, அணிகள் இணைப்பு விரைவில் நடைபெறும் என்று சூசகமாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெ. மரணம் குறித்து விசாரிக்க விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றும், ஜெ. வாழ்ந்த இல்லமான வேதா இல்லம் நினைவில்லமாக மாற்றப்படும் என்றும் கூறியிருந்தார். அவரின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், இந்த அறிவிப்பு தர்ம யுத்தத்துக்கு கிடைத்த வெற்றி என்று கூறியுள்ளார்.

மேலும், ஓ.பி.எஸ்.-ன் 3 முக்கிய கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன என்றும் இணைப்புக்கான முயற்சியை வெளிப்படையாக மேற்கொள்ள வேண்டிய நேரம் கனிந்து விட்டதாகவும் மாஃபா. பாண்டியராஜன் கூறியுள்ளார்.