புதிய ஆளுநரின் பணி ஜனநாயக முறையில் இருக்க வேண்டும்; கனிமொழி எம்.பி.
தமிழகத்தின் புதிய ஆளுநரின் பணி ஜனநாயக முறையில் இருக்க வேண்டும் என்று திமுக எம்.பி. கனிமொழி கூறியுள்ளார்.
தமிழக ஆளுநராக இருந்த ரோசய்யாவின் பதவிக்காலம் முடிந்து அவர் ஆளுநர் பதவியிலிருந்து விலகிய பிறகு மகாராஷ்டிர ஆளுநர் வித்யாசாகர் ராவ் தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு தமிழகத்தில் பல்வேறு அரசியல் நெருக்கடிகள் ஏற்பட்டபோதிலும் தமிழகத்திற்கு முழுநேர ஆளுநர் நியமிக்கப்படவில்லை. தமிழகத்திற்கு முழுநேர ஆளுநரை நியமிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
இந்த நிலையில், தற்போது தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆளுநர் பன்வாரிலால் வரும் 6 ஆம் தேதி அன்று பதவியேற்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
புதிய ஆளுநர் குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக எம்.பி. கனிமொழி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், புதிய ஆளுநரின் பணி ஜனநாயக முறையில் இருக்க வேண்டும் என்று கூறினார். மேலும் பேசிய அவர், தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் காரணமாக உயிரிழப்பு அதிகரித்து வருவதாகவும் கனிமொழி குற்றம் சாட்டினார்.