அரசியல் ஆதாயத்துக்காக தப்பு செஞ்சிட்டீங்க எடப்பாடி...! அதிமுகவை எதிர்க்கும் பாஜக மேலிடம்...!
அரசியல் ஆதாயம் தேடி கடந்த 6 ஆண்டுகளாக தமிழக அரசு தவறு செய்துவிட்டதாகவும் பேருந்து கட்டணத்தை ஒரேடியாக ஏற்றியதற்கு பதில், சிறிது சிறிதாக ஏற்றியிருக்க வேண்டும் மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக பாஜகவுக்கும் அதிமுகவுக்கும் கருத்து மோதல் முற்றிக்கொண்டே வருகிறது.
எடப்பாடி அரசு தலைமையேற்றதும் அதிமுகவும் மத்திய பாஜகவும் இணைந்து செயல்பட்டு வந்தது. இதனால் எதிர்கட்சிகள் எடப்பாடி அரசு பாஜகவின் பினாமி அரசாக செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டின.
ஆனால் முதலமைச்சர் எடப்பாடியும் அமைச்சர்களும் இதற்கு மறுப்பு தெரிவித்து வந்தனர். இதைதொடர்ந்து அடுத்தடுத்து தமிழகத்தில் பாஜகவின் ஈடுபாடுகள் அதிகரித்து கொண்டே வந்தது.
இதற்கு பதிலளித்த அதிமுக மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது தவறில்லை எனவும் தமிழகத்திற்கு தேவையான நிதியை பெறவே அவ்வாறு உள்ளோம் எனவும் விளக்கம் அளித்தது.
ஆனாலும் விமர்சனங்கள் விட்ட பாடில்லை. இதைதொடர்ந்து ஆர்.கே.நகர் தேர்தலில் ஆளுங்கட்சி அதிமுகவே கவிழ்ந்தது. சுயேட்சையாக போட்டியிட்ட தினகரனிடம் படுதோல்வி அடைந்தது.
இதில் போட்டியிட்ட பாஜகவும் நோட்டாவை விட குறைவான வாக்குகளே பெற்று டெபாசிட் இழந்தது.
இது அக்கட்சிக்கு பெரும் அவமானமாக கருதப்பட்டது. ஒரு தேசிய கட்சி நோட்டாவை விட குறைந்த வாக்குகளை பெற்றதால் சமூக வலைத்தளங்களில் வருத்தெடுக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை,தமிழகத்தைக் பொறுத்தவரை பாஜக, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளுக்கும், நோட்டாவுக்கும்தான் கடுமையான போட்டி நிலவி வருவதாக கிண்டல் செய்தார்.
மேலும் அதிமுகவே பாஜகவை கிண்டல் செய்யும் அளவுக்கு அக்கட்சி தமிழகத்தில் வழுவிழந்து உள்ளது.
இதனால் அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என அதிமுக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர் பாஜகவை சேர்ந்த தமிழிசையும், பொன்.ராதாகிருஷ்ணனும்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பொன்.ராதாகிருஷ்ணன், அரசியல் ஆதாயம் தேடி கடந்த 6 ஆண்டுகளாக தமிழக அரசு தவறு செய்துவிட்டதாகவும் பேருந்து கட்டணத்தை ஒரேடியாக ஏற்றியதற்கு பதில், சிறிது சிறிதாக ஏற்றியிருக்க வேண்டும் குறிப்பிட்டார்.
பேருந்து கட்டணத்தை சிறிது சிறிதாக உயர்த்தியிருந்தால் மக்களும் அதனை ஏற்றிருப்பார்கள் எனவும் இந்த கட்டண உயர்வை நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.