உச்சநீதிமன்றத்தை தேவைக்கேற்ப பயன்படுத்துகிறது மத்திய அரசு - ஆதாரத்துடன் போட்டுத்தாக்கிய டிடிவி...!
காவிரி நதிநீர் பிரச்சனையில் இறுதித் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் 6 வாரங்களுக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் இது வரை அதற்கான முயற்சிகளையோ அல்லது அறிவிப்பையோ மத்திய அரசு வெளியிடவில்லை.
இது தொடர்பாக தமிழக சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வரும் 30 ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
இதைதொடர்ந்து காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மெத்தம் 9 பேர் கொண்ட காவிரி மேற்பார்வை ஆணையம் அமைக்கப்படும் என்று நீர்வளத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதில் 5 முழு நேர உறுப்பினர்களும், மாநிலங்களைச் சேர்ந்த 4 பகுதி நேர உறுப்பினர்களும் இடம்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவிரி மேற்பார்வை ஆணையத்தை அமைப்பதை தவிர வேறு வழியில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது.
இந்நிலையில், நீதிமன்றம் விதித்த கால அவகாசத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, தஞ்சாவூர் திலகர் திடலில் டிடிவி தினகரன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள், தினகரன் ஆதரவாளர்கள், விவசாயிகள் என ஆயிரக்கணக்கானோர் அந்த போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த போராட்டத்தின் போது பேசிய அவர், மாநில சுயாட்சி கொள்கையை மத்திய அரசு தொடர்ந்து ஒடுக்குவதாகவும் விவசாயத்தை அழித்துவிட்டு எண்ணெய் எடுப்பது, ஹைட்ரோ கார்பன் திட்டம், வைரம் எடுப்பது உள்ளிட்ட செயல்களை செய்தால் தமிழகமும் ஒருநாள் சோமாலியாவைப் போல மாறும் அபாயம் உள்ளது எனவும் குற்றம் சாட்டினார்.
மேலாண்மை வாரியம் தான் அமைக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு மாற்றான ஒரு அமைப்பு தமிழகத்திற்கு தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
உச்சநீதிமன்றம் கூறியதை காரணம் காட்டி ஹஜ் யாத்திரை மானியத்தை நிறுத்தும் மத்திய அரசு, அதே உச்சநீதிமன்றம் கூறும் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுப்பது ஏன் எனவும் பேசினார்.