அதிமுக பொதுக்குழு நடக்குமா? நடக்காதா? - சற்று நேரத்தில் வெளியாகிறது தீர்ப்பு...!
பொதுக்குழுவை கூட்ட எடப்பாடிக்கு அதிகாரம் இல்லை என கூறி பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ வெற்றிவேலின் மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவுற்ற நிலையில் இன்று இரவு 7.15 மணிக்கு தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது உயர்நீதிமன்றம்.
எடப்பாடி அணியும் ஒபிஎஸ் அணியும் இணைந்த பின்னர் நாளை அக்கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என எடப்பாடி அறிவித்தார்.
இதற்கு எதிராக டிடிவி தினகரன் தரப்பு எம்.எல்.ஏக்கள் மறுப்பு தெரிவித்தனர். மேலும், பொதுக்குழு கூட்டுவதற்கு பொதுச்செயலாளர் மற்றும் துணைப் பொதுச்செயலாளருக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது என்பதால் நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ வெற்றிவேல் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு தடை விதிக்க நீதிபதி மறுப்பு தெரிவித்து, நீதிமன்ற நேரத்தை வீணடித்த காரணத்தால் எம்.எல்.ஏ வெற்றிவேலுக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து டிடிவி தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு மனு இன்று மாலை விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது.
இரு தரப்புக்கும் இடையே காரசார விவாதம் நடைபெற்றது. விசாரணை நிறைவுற்ற நிலையில், இன்று இரவு 7.15 மணிக்கு தீர்ப்பை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. எனவே பொதுக்கூட்டம் நடக்குமா நடக்காதா என்ற எதிர்ப்பார்ப்பில் அதிமுகவினர் திகைப்பில் இருந்து வருகின்றனர்.