முன்னாள் அமைச்சர்கள் மீதான ரெய்டும் தேர்தல் வாக்குறுதிதான்... மாஸ் காட்டும் திமுக அமைச்சர்..!
கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்த போது தங்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தார். இதனை நீதிமன்றத்தின் மூலம் எதிர்கொண்டதாக கூறினார்.
புகாரின் அடிப்படையிலேயே முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சோதனை நடைபெற்றதாகவும், அவர் மீது நியாயம் இருக்கும் பட்சத்தில் நீதிமன்றத்தின் மூலம் நீதியை தேடி கொள்ளப்பட்டும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீடு மற்றும் அவருக்கு சொந்தமான 60 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் நேற்று காலை திடீரென அதிரடி சோதனை மேற்கொண்டனர். சுமார் 12 மணிநேரத்திற்கு மேலாக சோதனை நடைபெற்றது. இதில், ரூ.13 லட்சம் ரொக்க பணம், நிதி பரிமாற்றம் தொடர்பான ஆவணங்கள், ரூ.2 கோடி வைப்பு தொகைக்கான ஆவணங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியானது. இந்த சோதனை திட்டமிட்டு பழிவாங்கும் நடவடிக்கை என்று அதிமுக தலைவர்கள் மற்றும் பாஜகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களுக்கு அமைச்சர் சாமிநாதன் பதிலடி கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சாமிநாதன்;- கடந்த 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்த போது தங்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டதாக தெரிவித்தார். இதனை நீதிமன்றத்தின் மூலம் எதிர்கொண்டதாக கூறினார்.
மேலும், திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று முறைகேடாக அரசு பணத்தை செலவு செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. அந்த வகையில் தான் தற்போது எஸ்.பி. வேலுமணி மீதான குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதால் சோதனை செய்யப்பட்டிருப்பதாகவும் இதுவும் தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று என்றும் அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார்.