டிடிவி தினகரன் மீதுள்ள அன்னிய செலாவணி வழக்கை விசாரிக்க தடை - உயர்நீதிமன்றம் உத்தரவு
அன்னிய செலாவணி வழக்கில், குற்றவியல் நீதிமன்றத்தில் டிடிவி.தினரகனிடம் நடத்தப்படும் விசாரணைக்கு இடைகால தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 1996ம் ஆண்டு சசிகலா, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் மீது அந்நிய செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கின் விசாரணை சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீண்ட காலமாக இந்த வழக்கின் விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கின் விசாரணையில், கோடநாடு எஸ்டேட் பங்குகளை போலி நிறுவனம் மூலமாக வாங்கியதாக குற்றச்சாட்டு பதிவு செய்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என டிடிவி தினகரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் டிவிஷன் பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, டிடிவி.தினகரன் தரப்பில், எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக அன்னிய செலாவணி வழக்கு நடந்து வருகிறது. இதில், கடந்த சில மாதங்களாக அமலாக்கப்பிரிவு தன் மீது பழி சுமத்த முனைப்பு காட்டுகிறது. இது காலம் தாழ்ந்த குற்றச்சாட்டு என தெரிவிக்கப்பட்டது.
மேலும், தான் மலேசிய குடிமகன் என்று பாஸ்போர்ட்டை முடக்கி வைத்துள்ளனர். தற்போது, தமிழகத்தில் இருப்பதை சுட்டிக்காட்டி பல்வேறு குற்றச்சாட்டுகளை பதிவு செய்துள்ளனர். இதனால், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதனை ஏற்று கொண்ட நீதிபதி, எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில், டிடிவி.தினகரன் மீதான அன்னிய செலாவணி வழக்கை விசாரிக்க இடைகால தடை விதித்து உத்தரவிட்டார்.