டெப்பாசிட் வாங்குவாரா? சுந்தர் சி-யை டம்மியாக்கிய PTR பழனிவேல் தியாகராஜன்!
PTR vs Sundar C: திமுக கட்சியின் கோட்டையாக கருதப்படும், மதுரை மத்திய தொகுதியில் என்டிஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் சுந்தர் சி டெப்பாசிட் பெறுவாரா? என பலர் விமர்சித்து வருகின்றனர்.

மதுரை மத்திய தொகுதி தேர்தல்:
மதுரை மத்திய தொகுதியில் தேர்தல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. திமுக சார்பில் போட்டியிடும் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் என்டிஏ கூட்டணியில் போட்டியிடும் சுந்தர்.சி ஆகியோருக்கு இடையே தான் தற்போது வார்த்தை மோதல்கள் முற்றியுள்ளன. இதுவே தற்போது மதுரை மத்திய தொகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுந்தர்.சி கருத்து
சுந்தர்.சி ஆரம்பத்திலிருந்தே திமுக கட்சிக்கு எதிராகவும், வேட்பாளர் PTR பழனிவேல் தியாகராஜன் குறித்தும் சில முரண்பாடான கருத்துக்களை தெரிவித்தது அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தின. தற்போது அத்தகைய விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பது போல் பேசியுள்ளார் பிடிஆர் தியாகராஜன்.
ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்:
குறிப்பாக, சினிமா பின்னணியிலிருந்து அரசியலுக்கு வருகை தந்துள்ள நபர்களை குறிவைத்து இவர் பேசியது கவனம் பெற்றுள்ளது. அதே நேரம், தேவையற்ற முக்கியத்துவம் எதிரணி வேட்பாளருக்கு கிடைக்கக் கூடாது என்பதிலும் கண்ணும் கருத்துமாக உள்ளார். தன்னுடைய எதிர் அணியினர் குறித்து இவர் பேசும்போது, ஜனநாயகத்தில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்; அது அவர்களுக்கான உரிமை. ஆனால், ஒரு தொகுதியுடன் உண்மையான தொடர்பு மற்றும் மக்கள் பற்றிய புரிதல் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்பது நியதி என வலியுறுத்தினார்.
சுந்தர்.சி பேசுவது மக்களை அவமதிப்பது
சுந்தர்.சி குறித்து அவர் கூறுகையில், மதுரை மத்திய தொகுதியுடன் அவருக்கு நேரடி தொடர்பு இல்லை என்றும், வெறும் வாய்ப்பின் அடிப்படையில் தான் அவர் இங்கு போட்டியிட வருகிறார் என்றும் விமர்சித்தார். “ஒரு தயாரிப்பாளர் அழைத்ததால் தான் இந்தத் தொகுதிக்கு வந்தேன்” என்ற வகையில் பேசுவது, அந்த பகுதியை சேர்ந்த மக்களை அவமதிப்பது போல் இருப்பதாக குறிப்பிட்டார்.
சரியான அணுகுமுறை அல்ல:
மேலும், ஒரு அரசியல்வாதி என்ற முறையில், மக்களுடன் நெருக்கமாக இருந்து, அவர்களின் பிரச்சனைகளை புரிந்து கொண்டு செயல்பட வேண்டும் என்றும், ஆனால் சுந்தர்.சி இதுவரை எந்த ஒரு பொதுமக்கள் பிரச்சனைக்கும் குரல் கொடுத்ததாக எனக்கு தெரியவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து பேசும்போது, ஒரு தொகுதியை பற்றி அடிப்படை தகவல்கள் கூட தெரியாமல் தேர்தலில் நிற்பது சரியான அணுகுமுறை அல்ல.
இவரால் எப்படி மக்களுக்கு சேவை செய்ய முடியும்?
அவருக்கு மதுரை மத்திய தொகுதியில் எங்கு பள்ளிகள், மருத்துவமனைகள், ரேஷன் கடைகள் போன்ற அடிப்படை அமைப்புகள் உள்ளன என்பது கூட தெரியாது. இவரால் எப்படி மக்களுக்கு சேவை செய்ய முடியும் என விளாசினார்.
அதே நேரத்தில், தனது அரசியல் பயணத்தில் எதிர்க்கட்சியை தேவையின்றி நான் விமர்சனம் செய்தது இல்லை என்றும் பிடிஆர் கூறினார். எப்போதும் தகவல்களை ஆய்வு செய்து, உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு தான் பேசுவேன் என்றார்.
60 சதவீத வாக்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன்:
இறுதியாக, தேர்தல் குறித்து தனது நம்பிக்கையை வெளிப்படுத்திய பிடிஆர், வாக்கு எண்ணிக்கையின் முடிவில் தன்னுடைய வெற்றி உறுதி எனவும், 60 சதவீத வாக்கு பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவேன் என கூறியுள்ளார். கள தகவல்களும் இவருக்கே சாதகமாக உள்ளன. இதை தவிர வாக்கு பிரிவதால், சுந்தர் சி டெபாசிட்டாவது வாங்குவாரா என அரசியல் விமர்சகர்கள் தங்களின் கருத்தை கூறி வருகின்றனர்.