பிரதமரும் நிதியமைச்சரும் முதல்வருக்கு நன்றி சொல்லணும்.. அதற்கான காரணத்தைச் சொன்ன பழனிவேல் தியாகராஜன்.!
பிரதமரும் நிதியமைச்சரும் தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
பட்ஜெட் மீதான பதிலுரையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “தமிழக அரசு பெட்ரோல் மீதான வரியைக் குறைத்த பிறகு, பெட்ரோலின் விற்பனை நாள் ஒன்றுக்கு சுமார் 12 சதவீதம் அதிகரித்துள்ளது. பெட்ரோல் மீதான வரியை நாம்தான் குறைத்தோம். மத்திய அரசு வரியைக் குறைக்கவில்லை. அதன் அடிப்படையில் பார்த்தால், ஒரு நாளைக்கு 11.29 லட்சம் லிட்டர் பெட்ரோல் விற்பனை அதிகரித்துள்ளது. இந்த நிலைமை இப்படியே நீடிக்குமா என்று தெரியவில்லை.
ஒரு வேளை நீடித்தால், இந்த விற்பனை விகித மாற்றத்தால் மத்திய அரசுக்குக் கூடுதல் வருமானம் கிடைக்கும். ஒரு நாளைக்கு ரூ.3.55 கோடி கூடுதலாக கிடைக்கும் என்ற புள்ளிவிவரத்தைத் தெரிவிக்கிறேன். அப்படியென்றால், இப்புள்ளிவிவரத்தின் அடிப்படையில், மத்திய அரசுக்கு ஓராண்டுக்கு ரூ.1,200 கோடி கூடுதல் வருமானம் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடுத்த நடவடிக்கையால் இது ஏற்பட்டுள்ளது. அதனால், நிதியமைச்சரும் பிரதமரும் தமிழக முதல்வருக்கு இதற்காக நன்றி தெரிவித்தால் முறையாக இருக்கும்” என்று பழனிவேல் தியாகராஜன் பேசினார்.