தமிழிசைக்கு பதவி.. புரியாத புதிரா இருக்கு.. உள்நோக்கமா தெரியுது.. பொடி வைக்கும் கார்த்தி சிதம்பரம்.!
தமிழக அரசியலில் முழுக்க ஈடுபட்டு, தெலங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசைக்குக் கொடுத்துள்ளனர். அவரை நியமித்ததில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது என்று சிவகங்கை காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியிலிருந்து யார் வெளியேறினாலும் அது வருந்தத்தக்க விஷயம்தான். காங்கிரஸிலிருந்து எக்காரணத்துகாகவும் பாஜகவில் சேருவதை கொஞ்சம் கூட ஏற்க முடியாது. ஏனென்றால், காங்கிரஸுக்கும் பாஜகவிற்கும் 180 டிகிரி அளவில் கொள்கை வேறுபாடு உள்ளது. ஆனால், அவர்கள் பாஜகவில் சேருவது பச்சை சந்தர்பவாதம். தலைவர்கள் பாஜகவிற்கு செல்வதை கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் கொஞ்சம்கூட விரும்பவில்லை.
புதுச்சேரியில் கிரண்பேடியை மாற்ற வேண்டும் என்று எல்லா அரசியல் கட்சிகளும் கோரிக்கை வைத்தன. ஆனால், திடீரென தேர்தல் நேரத்தில் இரவோடு இரவாக அவரை மாற்றியிருப்பது புரியாத புதிராக உள்ளது. இதற்கு மத்திய அரசோ அல்லது கிரண்பேடிதான் விளக்க வேண்டும். பொதுவாக புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பு தமிழக ஆளுநர்வசம் ஒப்படைக்கப்படும். ஆனால், தமிழக அரசியலில் முழுக்க ஈடுபட்டு, தெலங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசைக்குக் கொடுத்துள்ளனர். அவரை நியமித்ததில் ஏதோ உள்நோக்கம் இருப்பதாக தெரிகிறது.
காங்கிரஸ்காரர்களை இழுப்பதன் மூலம் பாஜகவுக்கு செல்வாக்கு இல்லை என்பதையே காட்டுகிறது. நாங்கள் ஆர்எஸ்எஸ்-ல் இருந்து, வருகிறோம் எனக் கூறும் பாஜகவினர், எதற்காக மற்ற கட்சிகளில் இருந்து தலைவர்களை இழுக்க வேண்டும்? எப்படி இருந்தாலும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவு தெளிவாக இருக்கும். தமிழகத்தில் காங்கிரஸ் - திமுக கூட்டணி வெற்றி பெறும். அதுபோல் புதுச்சேரியிலும் இதே கூட்டணி வெற்றி பெறும்.” என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.