ஓபிஎஸ் எந்த இடத்திலும் தன்னை முதல்வராக அறிவிக்க வேண்டும் என கேட்கவில்லை: அடித்து கூறும் ஆர்.பி உதயகுமார்.
எங்கு சென்றாலும் வெற்றி பெறுவேன் என்று கூறும் உதயநிதி பாகிஸ்தானில் சென்று போட்டியிட்டு வெற்றி பெற தயாரா என கேள்வி எழுப்பினார்.
ஓபிஎஸ் தன்னை முதல்வராக அறிவிக்க வேண்டுமென செயற்குழு கூட்டம் உட்பட எங்குமே கோரிக்கை வைக்கவில்லை என அமைச்சர் ஆர் பி உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.
சென்னை அண்ணா சாலையிலுள்ள மின் ஆளுமை ஆணையரகத்தில் தமிழகத்தில் தகவல் தொழில்நுட்ப மேம்பாடு குறித்து அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்ட பின் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பத்தை காலத்திற்கு ஏற்ற வகையில் மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது குறிப்பாக கல்வி மருத்துவம் விவசாயம் போன்றவற்றில் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்த பல்வேறு திட்டங்கள் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதல்வர் நிகழ்ச்சிகளில் ஏன் துணை முதல்வர் கலந்து கொள்வதில்லை என்ற கேள்விக்கு துணை முதல்வருக்கு உடல்நிலை சரியில்லாததால் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார்.
ஓபிஎஸ் இபிஎஸ் இடையே என்ன பிரச்சனை தான் நடக்கிறது? என்ற கேள்விக்கு இருவரும் அண்ணன் தம்பிகள் போல உள்ளனர். இருவருக்கும் இடையில் எந்த பிரச்சனையும் இல்லை எந்த ஒளிவுமறைவும் இல்லை என்று கூறினார். செயற்குழு கூட்டத்தில் பல்வேறு காரசார விவாதங்கள் நடைபெற்றதா என்ற கேள்விக்கு செயற்குழு கூடுவதே விவாதம் நடத்த தான். மௌன விரதம் இருப்பதற்கு அல்ல அதில் பல்வேறு ஆரோக்கியமான விவாதங்கள் நடைபெற்றது. சசிகலா விடுதலை குறித்த கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்க மறுத்துவிட்டார். இபிஎஸ் ஓபிஎஸ் பற்றி உதயநிதி ஸ்டாலின் விமர்சனத்திற்கு விடை அளித்த அமைச்சர் உதயகுமார். உதயநிதி ஸ்டாலின் என்ன இளவரசர் என்று கேள்வி எழுப்பினார். எந்த அடிப்படையில் அவருக்கு திமுகவில் உயர் பதவி வழங்கப்பட்டது இளவரசர் மனப்பான்மை யிலேயே உதயநிதியின் நடை உடை பாவனை இருக்கிறது. என்று கடுமையாக விமர்சனம் செய்தார். எங்கு சென்றாலும் வெற்றி பெறுவேன் என்று கூறும் உதயநிதி பாகிஸ்தானில் சென்று போட்டியிட்டு வெற்றி பெற தயாரா என கேள்வி எழுப்பினார்.
அமைச்சர்கள் மாறி மாறி ஆலோசனை நடத்த காரணமென்ன என்ற கேள்விக்கு இது வழக்கமான சந்திப்புகள் தான் ஊடகங்கள் தான் இதனை பெரிதாகின்றன பல்வேறு துறை சார்ந்த மற்றும் அரசியல் வியூகங்கள் குறித்தும் நாங்கள் ஆலோசனை நடத்தி வருகிறோம். இதில் எந்தவிதமான ஒளிவுமறைவும் இல்லை என்றார் எதிர்க்கட்சிகளை தேர்தல் களத்தில் சந்திக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறோம் அந்த வியூகங்கள் பற்றி இப்போதே வெளிப்படையாக கூற முடியாது என்றார் ஏழாம் தேதி கட்சி உயர்மட்ட குழு உரிய முடிவினை எடுக்கும். ஓபிஎஸ் எந்த இடத்திலும் தன்னை முதல்வராக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கவே இல்லை இதை ஆணித்தரமாக கூறுகிறேன் செயற்குழு கூட்டத்திலும் கூட ஓபிஎஸ் தன்னை முதல்வராக அறிவிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கவில்லை.. கட்சியின் வளர்ச்சி சார்ந்து பல்வேறு கருத்துக்களை முன்வைத்தார்.