திமுக அரசின் அடுத்தகட்ட ஊழல் பட்டியல் ஜூலையில் வெளியிடப்படும்..!அமைச்சர்களை அலறவிட்ட வி.பி.துரைசாமி
திமுக அரசு மீதான அடுத்தகட்ட ஊழல் பட்டியல்களை ஜூலை மாதம் வெளியிட இருப்பதாக பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி தெரிவித்துள்ளார்.
திமுக-பாஜக மோதல்
திமுக அரசு பதவியேற்று ஒரு வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் தமிழகத்தில் எதிர்கட்சியாக பாஜக தீவிரமாக செயல்பட்டு வருகிறது. திமுக அரசு மீது நாள்தோறும் குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறது. முதலமைச்சர் துபாய் பயணத்தில் முறைகேடு, மின் வாரியத்தில் பிஜிஆர் நிறுவனத்திற்கு தவறான முறையில் டெண்டர் ஒதுக்கீடு, ஜி.ஸ்கொயர் தனியார் நிறுவனத்திற்கு அரசு அனுமதியோடு நிலங்கள் ஒதுக்கீடு, கர்ப்பிணி பெண்களுக்கு வழங்கும் ஊட்டச்சத்து பொருட்கள் டெண்டரில் முறைகேடு என ஒன்றன் பின் ஒன்றாக பாஜக, திமுக அரசு மீது குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறது. இந்த குற்றச்சாட்டுக்களை திமுக அரசும் மறுத்து வருகிறது. திமுக அமைச்சர்கள் செய்த ஊழல்களை ஒன்றன் பின் ஒன்றாக வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார். மேலும் அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை தமிழக ஆளுநரிடம் புத்தகமாக வழங்க இருப்பதாக தெரிவித்திருந்தார்.
ஜூலையில் அடுத்த பட்டியல்
இந்தநிலையில் சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமையகத்தில் மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது நாளை 8-வது சர்வ தேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் 75,000 இடங்களில் யோகா தினம் கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் 4 மத்திய அமைச்சர்கள் நாளைய யோகா தின நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளதாக கூறினார். தேசநலனைக் கருத்தில் கொண்டு, இளமைத் துடிப்பான ராணுவத்தை உருவாக்கவே அக்னிபாத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதற்கு அரசியல் சாயம் பூசப்படுகிறது, தேசப்பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் அரசியல் கலப்பது நல்லதல்ல என தெரிவித்தார். அண்ணாமலை மீது ஆளுங்கட்சியான திமுக எத்தனை வழக்குகளை வேண்டுமானாலும் போட்டுக்கொள்ளட்டும் அந்த வழக்குகளை சந்திக்கத் தயார் எனவும் தெரிவித்தார். திமுக அரசின் அடுத்தகட்ட ஊழல் பட்டியல் ஜூலையில் வெளியிடப்படும் என கூறினார்.
இதையும் படியுங்கள்