பலமற்ற தமிழக அரசின் மீது தாக்குதலுக்கு தயாரான ராணுவ அமைச்சர்: சீதாராமனின் சீற்றத்தில் வறுபடப்போகும் அமைச்சர்கள்.
ஆயிரம் சர்ச்சைகள் தொடர்ந்தாலும் தமிழகத்தில் விசிட் அடித்து ஆளுங்கட்சியின் ஆதங்கத்தை வீங்க வைக்கும் செயலை நிறுத்த மாட்டேன் என்பதில் குறியாய் இருக்கிறார் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
கடந்த சில வாரங்களுக்கு முன் கோயமுத்தூரில் ஒரு விழாவில் கலந்து கொண்ட நிர்மலா சீதாராமன், அங்கே ராணுவ தளவாட பூங்கா அமைக்கப்படுமென அறிவித்தார். ஆனால் அப்போது நிகழ்ச்சிக்கு வந்த உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தன்னிடம் சொல்லாமல் எப்படி இந்த மாவட்டத்தில் அரசு அறிவிப்பை வெளியிடலாம் என மிரட்டினார்! என்று சமீபத்தில் ஒரு பொதுக்கூட்டத்தில் பேசினார் பி.ஜே.பி.யின் மாநில பொருளாளர் எஸ்.ஆர். சேகர்.
பிறகு அவரே ‘மத்தியமைச்சரை மாநில அமைச்சர் மிரட்டவில்லை. என் கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது! என்று மறித்துப் பேசினார்.இருந்தாலும் கூட தமிழகத்தில் தங்களை அ.தி.மு.க. வி.ஐ.பி.க்கள் மதிப்பதில்லை, நிகழ்வுகளுக்கு அழைப்பதில்லை என்று பொதுவாக பொரிந்து தள்ளினர் பி.ஜே.பி.யினர்.இந்த விவகாரம் அணையும் முன்னரே சமீபத்தில் விருதுநகரில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டார் நிர்மலா சீதாராமன்.
கூடவே மாநில அமைச்சரும், அந்த மாவட்டத்துக்காரருமான ராஜேந்திர பாலாஜியும் கலந்து கொண்டார். செய்தியாளர்களை சந்தித்த நிர்மலா “உலக அளவில் தொழில் செய்வோர் இங்கு இருந்தும், இந்த மாவட்டம் மிக பின் தங்கியதாகவே உள்ளது. இந்த மாவட்ட மாணவர்களிடம் கற்றல் திறன் மிக குறைவாகவே உள்ளது. சுகாதார வசதிகள், பயிர் காப்பீட்டுத் திட்டம் உட்பட அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்குச் சென்று சேரவில்லை. இதனால்தான் இந்த மாவட்டம் வளர்ச்சியடையாமல் உள்ளது.” என்று விளாசித் தள்ளிவிட்டார்.
இதனை பக்கத்து சேரில் அமர்ந்தபடி மறுப்பேதும் சொல்லாமல் கேட்டுக் கொண்டேயிருந்தார் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. அ.தி.மு.க.வின் இரண்டு ஆட்சியிலும், அந்த மாவட்டத்துக்காரரான ராஜேந்திர பாலாஜிதான் அமைச்சராக இருக்கிறார். ஆனால் விருதுநகர் மாவட்டம் முன்னேற எந்த முயற்சியும் அவர் செய்யவில்லை என்பதுபோல்தான் மத்தியமைச்சரின் விளாசல்கள் இருந்தன. ஆனாலும் ராஜேந்திர பாலாஜியால் எதுவும் பேசமுடியவில்லை.
சப்தநாடியும் அடங்கி அமர்ந்திருந்தார்.
இது இப்படியிருக்க, அமித்ஷா மற்றும் மோடியின் சார்பாக ஒரு காலத்தில் தமிழ்நாட்டை ஸ்கேன் செய்து கொண்டிருந்தவர் வெங்கய்யா நாயுடு. இப்போது அவர் துணை ஜனாதிபதியாகிவிட்டபடியால் அந்த இடத்தில் நிர்மலா சீதாராமன் அமர்த்தப்பட்டுள்ளார்.
இனி நிர்மலா இப்படித்தான் தமிழகத்தின் பல மாவட்டங்களுக்கு சுற்றுப் பயணம் செய்து ஆளும் கட்சியின் பலவீனங்களின் மேல் பலமான தாக்குதல் நடத்துவார் என்கிறார்கள் விபரமறிந்த பி.ஜே.பி.யினர். சிம்பிளாக சொல்வதென்றால் ‘மக்கள் நலன் நாடாத தமிழக அரசின் மீது தொடர் தாக்குதல் தொடுத்து தகர்க்க ராணுவ அமைச்சர் தயார்’ என்கிறார்கள் பி.ஜே.பி.யினர்.
வேலுமணி விவகாரத்துக்குப் பிறகே இந்த முடிவாம்.