”கருத்து வேற்றுமைகளை மறக்க வேண்டும்” - தம்பிதுரை வேண்டுகோள்...!!!
கருத்து வேற்றுமைகளை மறந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கட்சியை சிறப்பான வழியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு பன்னீர்செல்வம் முதலமைச்சராகவும் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராகவும் பொறுப்பேற்றனர்.
ஆனால் பன்னீர்செல்வத்தை திடீரென பதவியில் இருந்து விலகும்படி சசிகலா உத்தரவிட்டதால் அவர் கட்சியை உடைத்தார்.
அவருக்கு 12 எம்எல்ஏக்கள், 12 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்தனர். இதனால் மீதம் உள்ள 123 எம்எல்ஏக்கள் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.
ஆனால் சொத்துகுவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்றதால் முதல்வர் பதவி எடப்பாடியிடம் சென்றது.
எடப்பாடி பழனிச்சாமி முதல்வரான பிறகு, துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரன் நியமிக்கப்பட்டார்.
இதையடுத்து அதிமுக டிடிவி கட்டுப்பாட்டுக்குள் சென்றதால் ஆட்சியை கைப்பற்ற விரும்பினார். இதனால் ஆத்திரமடைந்த எடப்பாடி அமைச்சரவை டிடிவி எதிராக செயல்பட ஆரம்பித்தது.
இதைதொடர்ந்து எடப்பாடி பன்னீருடன் கூட்டணி வைக்க முடிவு செய்தார். ஆனால் பன்னீர் அணியோ நீண்ட நாட்களாக பிடிகொடுக்க வில்லை.
இதையடுத்து முதலாவதாக ஜெ மரணம் குறித்து நீதி விசாரணை அமைக்கப்படும் என எடப்பாடி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மேலும் ஜெ இல்லம் நினைவு இல்லமாக மாற்றப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார்.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை முதலமைச்சரின் அறிவிப்புக்கு வரவேற்பு அளித்துள்ளார்.
மேலும், கருத்து வேற்றுமைகளை மறந்து அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் எனவும் கட்சியை சிறப்பான வழியில் கொண்டு செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.