அட... இதென்ன புதுக்கூத்து... பரமக்குடியில் ’மோடி’க்காக பாஜகவினர் நடத்திய அக்கப்போர்..!
பரமக்குடி தாலுகாவில், போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்கக் கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பரமக்குடி தாலுகாவில், போகலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை வைக்கக் கோரி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுவாக மத்திய அரசு அலுவலங்களில் பிரதமர் படமும், மாநில அரசு அலுவலகங்களின் ஆலும் முதல்வரின் புகைப்படங்கள் இடம்பெறுவது வழக்கம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக உள்ளாட்சி அமைப்புக்குக் கீழ்பட்ட யூனியன் அலுவலகத்தில் பிரதமர் மோடியின் புகைப்படத்தை பொறுத்த வேண்டும் என போராட்டம் நடைபெறுவது தமிழகத்தில் பரமக்குடி தாலுகாவில்தான் முதன்முறையாக இருக்கும்.
பரமக்குடி தாலுகா, போகலூர் ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த 23ஆம் தேதி பிரதமர் மோடியின் படத்தை அத்துமீறி பாஜக கவுன்சிலர் கதிரவன் மற்றும் காளிதாஸ் ஆகியோர் அலுவலகத்தில் மாட்டினர். இந்த புகைப்படம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இருந்து அதிகாரிகள் தரப்பில் அகற்றப்பட்டது. இதனைக்கண்டித்து நேற்று சத்திரக்குடி பேருந்து நிலையம் முன்பு பாஜக ஒன்றிய தலைவர் காளிதாஸ் தலைமையில் மாநில செயற்குழு உறுப்பினர் நாகராஜன், போகலூர் ஒன்றிய கவுன்சிலர் கதிரவன் ஆகியோர் முன்னிலையில், மாநில பட்டியல் இன மாநில தலைவர் பாலகணபதி, செயற்குழு உறுப்பினர் நாகராஜன், தேசிய பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் கூரியூர் நாகராஜ் ஆகியோர் உள்ளிட்ட ஏராளமானோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பாஜகவினர் மோடியின் படத்தை ஒன்றியத்தில் அலுவலகத்தில் வைப்பதற்காக ஊர்வலமாகச் சென்றபோது, பரமக்குடி டி.எஸ்.பி., வேல்முருகன் தடுத்து நிறுத்தி 5 பேர் கொண்ட குழுக்கள் சார்பாக மனு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சென்று படத்தை கொடுப்பதற்கு அனுமதி அளித்தார். அப்போது ஊராட்சி ஒன்றிய அலுவலக அதிகாரிகள் படத்தை வாங்க மறுத்ததால், தகராறு ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த பாஜக,.வினர் ஊராட்சி ஒன்றிய அலுவலக கதவை இழுத்துப் பூட்டினர். இதனை தொடர்ந்து, பாஜகவினர் மதுரை- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் பஸ் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இரு பக்கங்களிலும் சுமார் 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பஸ் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பரமக்குடி டி.எஸ்.பி வேல்முருகன், சத்திரக்குடி இன்ஸ்பெக்டர் அமுதா ஆகியோர் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பஸ் மறியல் போராட்டம் நடைபெற்ற போது பரமக்குடி ஒன்றிய பாஜக தலைவர் லிங்கபாண்டி தீக்குளிக்க பெட்ரோல் ஊற்றியதால் அங்கிருந்த போலீசார் அவரை மீட்டனர்.
இந்த சம்பவம் நடைபெற்ற ஒரு மணி நேரத்திற்கு பிறகு, பரமக்குடி கோட்டாட்சியர் தங்கவேலு போராட்டக்காரர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின், மோடியின் படத்தை பெற்றுக்கொண்டு, அரசின் உத்தரவை பெற்று ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்படும் என உறுதியளித்தன் அதனடிப்படையில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.