தயாராகிறது பதுக்கிய நிர்வாகிகளின் லிஸ்ட்... அதிமுக தலைமை எடுத்த அதிரடி முடிவு..!
பணத்தை பதுக்கிய அதிமுக நிர்வாகிகளை கட்டம் கட்டி தூக்க தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பணத்தை பதுக்கிய அதிமுக நிர்வாகிகளை கட்டம் கட்டி தூக்க தலைமை முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள பத்து சட்டமன்ற தொகுதிகளில், அதிமுக கூட்டணியில், கோவை தெற்கு தொகுதி தவிர மீதமுள்ள 9 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்களே நேரடியாக போட்டியிடுகின்றனர். இந்தத்தொகுதி வேட்பாளர்கள் சார்பில், வாக்காளர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கவும், கொஞ்சம் ‘வீக்’கான பகுதிகளில் தலா ரூ.2 ஆயிரம் பணம் விநியோகம் செய்யவும் கட்சி தலைமை உத்தரவிட்டது.
இதற்காக, தலைமையிடத்தில் இருந்து ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் குறைந்தது ரூ.5 கோடி முதல் அதிகபட்சம் ரூ.10 கோடி வரை பணம் அனுப்பி வைக்கப்பட்டது. இதை, கடைசி வாக்காளர் வரை பிரித்து அனுப்ப, கட்சி சார்பில் கண்காணிப்பாளர்களும் நியமிக்கப்பட்டனர். அதன்படி, விநியோகம் ஜரூராக துவங்கியது. ஆனால் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால், அதிமுகவினர் பணம் பதுக்க ஆரம்பித்துவிட்டனர். மேலும் அதிமுக வேட்பாளர் கொடுத்த பணத்தில் 50 சதவீதம் சுருட்டி விட்டனர். இதனால் பணம் கிடைக்காத வாக்காளர்கள் அதிமுக தரப்பு மீது கடும் கொந்தப்பில் இருந்தனர். குறிப்பாக அதிமுகவினர் அந்தந்த பகுதி கட்சி நிர்வாகிகள் மற்றும் கண்காணிப்பாளர்கள் கூட்டு சேர்ந்து அமுக்கிவிட்டனர்.
இந்த தகவல், வாக்குப்பதிவு நாளான நேற்றுதான், வேட்பாளர்களுக்கு தெரியவந்தது. இதைக்கேட்டு அவர்கள், அதிர்ந்து போய்விட்டனர். கட்சியின் மேலிட தலைவர்களும் உறைந்து போய்விட்டனர். ‘‘ஒவ்வொரு முறையும் பிளான், சரியாக ஒர்க் அவுட் ஆகுமே, இந்தமுறை ஏன் சொதப்பியது’’ என தலையை பிய்த்துக்கொண்டுள்ளனர்.