விடுமுறை நாட்களிலும் விடாது மருத்துவ கலந்தாய்வு…. - தமிழக அரசு அறிவிப்பு…
செப்டம்பர் 4 ஆம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை முடிக்க வேண்டும் என்பதால் நாளை விநாயகர் சதுர்த்தி மற்றும் சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் கவுன்சிலிங் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
நீட் தேர்வின் அடிப்படையில்தான் மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
இதையடுத்து வெளியிடப்பட்ட தரவரிசைப்பட்டியலில் ஓசூரை சேர்ந்த சந்தோஷ் என்ற மாணவர் 656 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்தார். கோவையை சேர்ந்த முகேஷ் கண்ணா என்ற மாணவர் 655 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடமும், 651 மதிப்பெண் பெற்ற திருச்சியைச் சேர்ந்த செய்யது ஹபீஸ் மூன்றாமிடமும் பிடித்தனர்.
மாநில பாடத்திட்டத்தில் படித்த 27,488 மாணவர்கள் தரவரிசை பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். சிபிஎஸ்இ-யில் பயின்ற 3 ஆயிரத்து 418 மாணவர்களும் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கடந்தாண்டுகளில் பயின்று தற்போது விண்ணப்பித்த 5 ஆயிரத்து 636 பேரும் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. நாளை முதல் பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வுகள் நடத்தப்படுகின்றன.
இந்நிலையில் செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் மருத்துவ கலந்தாய்வை நடத்தி முடிக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் காலஅவகாசம் வழங்கியுள்ளதையடுத்து கலந்தாய்வை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய, தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், நாளை விநாயகர் சதுர்த்தி மற்றும் சனி, ஞாயிறு போன்ற விடுமுறை நாட்களிலும் கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்தார்.
இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்திருப்பதாக கூறினார். கல்விக் கட்டணம் செலுத்த காசோலை எடுக்க முடியவில்லை என்றால் இதை பணமாக செலுத்தலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பாக www.tnhealth.org என்ற இணையதளம் வாயிலாகவும் கலந்தாய்வு தொடர்பான விவரங்களைதெரிந்து கொள்ளலாம் என ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.