பல்லாயிரக்கணக்கானோரின் தகவல்களை அனுமதியின்றி பயன்படுத்திய திமுக..? வீடியோவாக வெளிச்சத்துக்கு வந்த ரகசியம்..!
ஒன்றிணைவோம் வா என்கிற எண்ணுக்கு அழைத்ததாகவும், மனு அளித்ததாகவும் கூறப்பட்ட மக்களிடம் நேரில் சென்று விசாரித்தபோது, தாங்கள் ஒன்றிணைவோம் வா அமைப்புக்கு அழைப்பும் கொடுக்கவில்லை. உதவியும் கேட்கவில்லை
'ஒன்றிணைவோம் வா’என்கிற இயக்கயம் தொடங்கி பல லட்சம் பேர் உதவி கோரியுள்ளதாக தம்பட்டம் அடித்து வருகிறது திமுக தலைமை. ஆனால், உதவி கேட்க அவர்கள் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணில் யாருமே தொடர்பு கொள்ள முடியவில்லை என்று தகவல் வெளியான நிலையில், தங்கள் பெயரில் தங்களுக்கு தெரியாமலே திமுக உதவி கோர பயன்படுத்திக் கொண்டதாக மாபெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திமுக சார்பில் கொரோனா நிவாரண உதவி செய்யும் பொருட்டு ஸ்டாலின் தலைமையில் ஒன்றிணைவோம் வா எனும் இயக்கம் தொடங்கப்பட்டது. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் எதிர்க்கட்சி திமுக பல்வேறு நிவாரண உதவிகளை தனது தொண்டர்கள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட அமைப்புகள் மூலம் செய்து வருவதாகக் கூறப்பட்டது.
இந்த அமைப்பில் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் தவிர 10 லட்சம் தன்னார்வலர்களையும் இணைத்து தமிழகம் முழுவதும் கரோனா நிவாரணப்பணியில் ஈடுபட உள்ளதாகவும் உதவி தேவைப்படுவோர் அழைக்க ஒரு ஹெல்ப் லைன் நம்பர் கொடுக்கப்பட்டது. உதவி எண்ணான 90730 90730 நம்பருக்கு தொடர்பு கொண்டால் ரெக்கார்ட் செய்யப்பட்ட ஒரு பெண், திமுகவின் ஒன்றினைவோம் வா இயக்கத்தை தொடர்பு கொண்டதற்கு நன்றி. எங்களது அனைத்து உதவியாளர்களும் பிஸியாக இருக்கிறார்கள் சிறிது நேரம் காத்திருக்கவும் என்று பெண்குரல் ஒலிக்கிறது. மீண்டும் அதே பெண் குரல் எங்களது குழுவினர் அனைவரும் பிஸியாக இருக்கின்றனர். தற்போது அவர்களை தொடர்பு கொள்ள முடியாது.
தாங்கள் அழைத்த தொலைபேசி எண்ணை நாங்கள் பதிவு செய்து கொண்டோம். விரைவில் தங்களை எங்களது ஒன்றைணைவோம் வா குழு தொடர்பு கொண்டு உங்களுக்கு உதவும் எனக் கூறி அந்த இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இரண்டு நாட்கள், மூன்று நாட்கள் காத்திருந்தும் மீண்டும் ஒன்றைணைவோம் வா குழுவிற்காக காத்திருந்தும் பலனில்லை. அதாவது அவர்கள் அழைப்பதே இல்லை.
இந்த ஒன்றிணைவோம் வா இயக்கத்தை முகநூல் பக்கத்தில் விளம்பரப்படுத்த மட்டும் பல லட்சம் ரூபாய்களை வாரி இரைத்தது திமுக தலைமை. ஒரு நாளைக்கு தலா 40 ஆயிரம் ரூபாய். ஃபேஸ்புக் பணத்தில் பணத்தை கட்டினால் பல்லாயிரக்கணக்கானோரில் முக நூல் கணக்கில் இந்த விளம்பரம் சென்று சேரும்.
ஆனால், என்ன பிரயோஜனம்..? மக்கள் அந்த எண்ணில் தொடர்பு கொண்டு உதவிகளை கேட்க முடிவதில்லை என்கிற குற்றச்சாட்டு இருந்து வந்தது. ஆனால், ஒரு லட்சம்பேர் மனு அளித்ததாகவும் அந்த மனுக்களை தலைமை செயலாளர் சண்முகத்திடம் திமுக எம்பிகள் சிலர் கொண்டு போய் சேர்த்தனர். அந்த மனுக்களை முதல்வரின் தனிப்பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தபோது, 97 ஆயிரம் மனுக்கள் பொய்யானவை. பொதுமக்கள் அளிக்காத மனுக்கள். திமுகவே செட் -அப் செய்தவை எனத் தெரிய வந்துள்ளதாக உணவுத் துறை அமைச்சர் காமராஜ் உள்ளிட்டவர்கள் குற்றச்சாட்டை முன் வைத்தனர்.
இந்நிலையில் ஒன்றிணைவோம் வா என்கிற எண்ணுக்கு அழைத்ததாகவும், மனு அளித்ததாகவும் கூறப்பட்ட மக்களிடம் நேரில் சென்று விசாரித்தபோது, தாங்கள் ஒன்றிணைவோம் வா அமைப்புக்கு அழைப்பும் கொடுக்கவில்லை. உதவியும் கேட்கவில்லை எனக்கூறி அதிர வைத்துள்ளனர். தங்களது முகவரி, பெயரை பயன்படுத்தி திமுக தில்லாலங்கடி செய்து வருவதாக பகீர் குற்றச்சாட்டை கூறியுள்ளனர். அவர்களது வாக்குமூலங்கள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் சந்திட்சிரித்து வருகிறது.