The BJP can only do that says Tamilisai

பாஜக சொன்னவாறு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்துக் கொடுத்துள்ளது என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். காவிரி வழக்கில் திருத்தப்பட்ட மத்திய அரசின் வரைவுத் திட்டத்தை, உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, காவிரி அமைப்பு ஆணையத்தை பருவ மழைக்கு முன்பாக செயல்படுத்த மத்திய அரசிற்கு உத்தரவிட்டு, காவிரி தொடர்பான வழக்குகளை உச்சநீதிமன்றம் இன்று முடித்து வைத்துள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பாஜக தலைவர் தமிழிசை, மத்திய அரசு நிதானமாகச் செயல்பட்டாலும் நிரந்தரத் தீர்வை நோக்கிச் சென்றுகொண்டிருப்பதாகத் தெரிவித்தார். “குழு என்று இல்லாமல் ஆணையம் என்று வந்திருப்பதே ஆரோக்கியமான சூழலை உருவாக்கும். மேலும், ஆணையத்தின் அலுவலகத்தை பெங்களூரில் அல்லாமல் இந்தியாவின் தலைநகரில் அமைக்க மத்திய அரசு சம்மதம் அளித்திருப்பது வரவேற்க வேண்டியது. பல கட்சிகள் மத்திய அரசின் ஆட்சியைக் குறை சொல்வதையே நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும், காவிரி விவகாரத்தில் சட்டப்படியான தீர்வு சுமுகமாகக் கிடைக்கவிருப்பதாகவும் தெரிவித்தார்.

பாஜக அரசு சொன்னவாறு காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து தமிழக விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றியுள்ளது. காவிரி தொடர்பாக பாஜக வை கீழ்த்தரமாக பேசிய காங்கிரஸும், திமுகவும் இப்பொழுது எங்கே போய் மூஞ்சை வைத்துக் கொள்வார்கள். காவிரி பிரச்சனைக்கு மூல காரணமே திமுக தான் இப்பொழுது ஒன்றும் தெரியாதது போல் நடிக்கிறார்கள் என என காட்டமாக பேசியுள்ளார். காவிரிப் பிரச்சினையைத் தீர்ப்பது, பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே முடியும். தமிழகத்தில் விவசாயிகளின் தேவையை மத்திய அரசால் மட்டுமே நிறைவேற்ற முடியும்” என்று பேசினார்.

மேலும் பேசிய அவர் காவிரி விவகாரம் தொடர்பாக கமல்ஹாசன் கூட்டும் அனைத்துக் கட்சி கூட்டம் அவசியமற்றது என்று தெரிவித்த தமிழிசை, அதில் தனக்கு உடன்பாடு இல்லை என்றும் கூறினார்.